புதிய கல்விக்கொள்கையே தவறானது.. மும்மொழித்திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு நன்றி.. ஸ்டாலின் பாராட்டு!
சென்னை: புதிய கல்விக்கொள்கை என்ற பெயரால் தமிழகத்திற்குள் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு நன்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டி இருக்கிறார்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் பழனிசாமி உறுதியாக தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் அதிமுக அரசு எப்போதும் அனுமதிக்காது.எப்போதும் போல மாற்றம் இன்றி இருமொழி கல்விக் கொள்கை மட்டுமே தமிழகத்தில் இருக்கும் என்று முதல்வர் தனது அறிவிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
கடந்த 80 ஆண்டு காலமாக தமிழகம் இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். அதை பின்பற்றுவோம். 1965ல் இருந்தே இந்தி திணிப்பை தமிழகமே எதிர்த்து வந்துள்ளது. இந்த கொள்கையில் மாற்றம் இல்லை, என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கை என்ற பெயரால் தமிழகத்திற்குள் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு நன்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டி இருக்கிறார்.
மேலும் ஸ்டாலின் தனது டிவிட்டில், மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
80 ஆண்டுகளாக இருமொழி கொள்கையுடன் தமிழகம் - மும்மொழி கொள்கைக்கு அனுமதியே இல்லை- முதல்வர் திட்டவட்டம்