கருப்புச் சின்னத்துடன் திமுக தோழமைக் கட்சி தலைவர்கள் போராட்டம்... அரசுக்கு எதிராக முழக்கம்
சென்னை: மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் தமிழகம் முழுவதும் கருப்புச்சின்னம் அணிந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவரவர் வீடுகளுக்கு முன்பு நின்று சுமார் 10 நிமிடங்கள் வரை மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்ட முழக்கம் எழுப்பினர்.
திமுகவினரோடு சேர்ந்து காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
"குடியை கெடுக்கும் அதிமுக அரசு.. கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி" கருப்பு உடையில் முக ஸ்டாலின் கண்டனம்
இன்று போராட்டம்
கொரோனா நோய் தடுப்பு பணிகளில் அரசு கவனம் செலுத்துவதை விடுத்து டாஸ்மாக் கடைகளை திறக்க கவனம் செலுத்துவதாக கூறி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தமிழகம் தழுவிய அளவில் இன்று போராட்டம் நடத்தினர். கருப்புச் சட்டை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும், திமுக நிர்வாகிகளும், அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் அவரவர் இல்லங்களுக்கு முன்பு நின்று அரசுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தேவையா இது?
தேவையா.. தேவையா...? மதுக்கடைகளை இப்போது திறப்பது தேவையா...? என்றும், அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தின் முன்பு ஸ்டாலின் தனது குடும்பத்தினரோடு கருப்புச்சின்னம் அணிந்து இந்த போராட்டத்தில் பங்கேற்றார். இதேபோல் சத்தியமூர்த்தி பவன் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு கருப்பு பேட்ஜ் அணிந்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார்.
இல்லங்கள் முன்பு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தின் முன்பும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் டெல்லியில் உள்ள இல்லத்தின் முன்பும் நின்று டாஸ்மாக் கடைகளை திறக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். இதேபோல் சென்னை மன்னடியில் உள்ள தனது இல்லத்தின் முன்பு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவும், தி.நகரில் உள்ள பாலன் இல்லம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனும் கருப்பு சின்னம் அணிந்து போர்க்குரல் எழுப்பினர்.
அனைத்துக் கட்சி
தலைவர்கள் கருப்பு சின்னம் அணிந்து டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதை போல் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் தாங்கள் வசிக்ககூடிய பகுதிகளில் வீடுகளுக்கு வெளியே நின்று போராட்டம் நடத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு இந்திய அளவில் முதல்முறையாக அரசியல் கட்சிகள் சார்பில் மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றிருப்பது தமிழகத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக எம்.எல்.ஏ. சரவணன்
மதுரையில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. டாக்டர்.பா.சரவணன் தனது மருத்துவமனை முன்பு கறுப்புச் சட்டை அணிந்து மதுக்கடை திறப்பை எதிர்த்து கண்டன முழக்கமிட்டார். எம்.எல்.ஏ. சரவணன் உடன் தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.