திமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்திய அந்த 3 கட்சிகள்.. பரபரப்பில் அறிவாலயம்!
சென்னை: திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் இன்று நிறைவு செய்துள்ள நிலையில் மனிதநேய மக்கள் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தியது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. நேற்றைய காங்கிரஸுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் அக்கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அப்போது தங்களுக்கு இரு தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி சுப்பராயன் கூறுகையில் நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தை சுமூகமாகவும், நம்பிக்கையளிக்கும் விதமாகவும் நடந்து வருகிறது. மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெறும் என்றார்.
இந்த நிலையில் தற்போது திமுகவுடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தொகுதி பேச்சுவார்த்தை நடத்தினார்.