ராஜேந்திர பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் பண்ணுங்க.. ஆளுநரிடம் திமுக புகார் மனு
சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது.
திமுக எம்எல்ஏக்கள் ஜெ.அன்பழகன், மா. சுப்பிரமணியன் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் மதசார்பின்மைக்கு எதிராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
பட்ஜெட் பத்தி பேச கமல்ஹாசன் ஒன்றும் பொருளாதார மேதை கிடையாது.. ராஜேந்திர பாலாஜி
மதவெறி தூண்டும்
ஆளுநரை சந்தித்து மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை திமுக எம்எல்ஏக்கள் ஜெ.அன்பழகன், மா. சுப்பிரமணியன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அன்பழகன் பேசுகையில், " தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சமீப காலமாக பித்தம் தலைக்கேறிய நிலையில், ஒரு அமைச்சர் உறுதி மொழி ஏற்றால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மாறாக, ஒரு சாதாரண நபர் நடந்து கொள்ளக்கூடிய அளவுக்கு நடந்து கொள்ளாமல், வன்முறையை தூண்டுகிற அளவில், மத வெறியை தூண்டுகிற அளவில், இன்னும் சொல்லப்போனால் சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் தரும் வகையில் பேசியுள்ளார்.
அமைச்சர் சொன்னார்
ஒரு பேட்டியிலே சொல்கிற போது சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நானே துப்பாக்கியால் சுடுவேன் என்று பேசுவது, அடிக்கு அடி என்பது உதைக்கு உதை என்பது, அமைச்சராக இருந்து கொண்டு செய்கிற செயல் அல்ல. ஒரு ரவுடித்தனமான செயலாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவருடைய தலைவியாக இருக்கிற மறைந்த ஜெயலலிதா அவர்கள், மத்திய அரசில் இருக்கிற மோடியை பார்த்து மோடியா லேடியா என்று கேட்ட வரலாறு உண்டு.
ராஜேந்திர பாலாஜி
ஆனால் இந்த அமைச்சர் (ராஜேந்திர பாலாஜி) தான் கொஞ்ச நாளைக்கு முன்பு எங்களுக்கு எல்லாம் மோடி டாடி என்று சொன்னார். இப்போது அதை மெய்பிக்கிற வகையில் அந்த மதவெறியை கையில் எடுத்துக்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கின்ற வகையிலும், பெரும்பான்மையாக இருக்கிற மக்களிடையே பிளவு உண்டாக்குகிற வகையிலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர் மந்திரியாக நடந்து கொள்ளவில்லை. அவர் கையிலே கட்டியிருக்கும் கயிறுகளை பார்க்கும் போது அவர் மந்திரவாதியாக இருப்பாரோ என்ற சந்தேகம் தான் இருக்கிறது.
விசாரித்து நடவடிக்கை
ஆகவே இப்படிப்பட்ட நிலையிலே இருப்பவர்களை எல்லாம் மந்திரியாக நீடிக்க விடக்கூடாது என்ற விதத்தில் எங்களுடைய தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள், கவர்னர் அவர்களை சந்தித்து அமைச்சர் ராஜேந்தி பாலாஜி மீது நடவடிக்கை எடுத்து அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இன்றைக்கு நானும், சட்டமன்ற உறுப்பினர் மா சுப்பிரமணியன் அவர்களும் கவர்னர் அவர்களுடைய செயலாளரை சந்தித்து மனு அளித்துள்ளோம் .அவரிடத்திலே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய பேச்சின் வீடியோக்களை பென்டிரைவில் அளித்துள்ளோம். அத்துடன் புகாரும் அளித்துள்ளோம். கவர்னருடைய செயலாளரும் இது குறித்து தீர விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்" இவ்வாறு ஜெ.அன்பழகன் எம்எல்ஏ கூறினார்.