தமிழில் பேச தடை போட்ட தெற்கு ரயில்வே.. கண்டனம் தெரிவித்து திமுக போராட்டம்!
Recommended Video
சென்னை: ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் தமிழில் பேசக்கூடாது என தெற்கு ரயில்வே தடைவிதித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மோத இருந்த பெரும் விபத்து கடைசி நேர கண்டுபிடிப்பால் தவிர்க்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ரயில்வே பணியாளர்கள் மூன்று பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதற்கு மொழிப் பிரச்சனையே காரணம் என கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மொழிப் பிரச்னையால் தகவல் புரியாமல் போவதை தவிர்க்க இந்தி அல்லது ஆங்கிலத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ள தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் இந்த உத்தரவுக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற தெற்கு ரயில்வே உத்தரவை கண்டித்து சென்னையில் திமுகவினர் போராட்டம் நடத்தவுள்ளனர்.
சென்னையில் தெற்கு மண்டல அலுவலகம் முன் திமுக சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.