திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்.. டிஆர் பாலு விளக்கம்
சென்னை: திமுக எம்பி டி.ஆர்.பாலு சொல்வதை பார்த்தால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது உறுதியாகி உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் சீட் பங்கீட்டில் கூட்டணி தர்மத்தை திமுக காப்பாற்றவில்லை என்று கேஎஸ் அழகிரி சொன்னது பெரிய அளவில் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.இதற்கு திமுக தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
அதேநேரம் டெல்லியில் குடியுரிமை காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நேற்று நடந்தது. குடியுரிமை திருத்த சட்டம், என்ஆர்சி, ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது, நாடு முழுக்க நடக்கும் போராட்டம் ஆகியவை குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது.
மலேசிய பாமாயிலை ஒட்டுமொத்தமாக புறக்கணித்த இந்தியா.. மலேசியாவுக்கு பலத்த அடி
திமுக புறக்கணிப்பு
எதிர்க்கட்சிகள் எல்லாம் கலந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை இதற்கு அழைப்பு விடுத்தது. ஆனால் மொத்தம் 20 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். எனினும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணி கட்சியான திமுக பங்கேற்கவில்லை.
ஆச்சர்யமான ஒன்று
இதனால் திமுக காங்கிரஸ் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதோ என்று தகவல்கள் பரவியது. ஏனெனில் நேற்று டெல்லியில் தான் திமுக எம்பி டிஆர் பாலு இருந்தார். விசிக உள்ளிட்ட மற்ற கட்சிகள் பங்கேற்றபோதும் திமுக சார்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடத்திய கூட்டத்தில் யாரும் பங்கேற்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
பிரச்சனைக்கு வித்திட்டது
உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை.ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது என்று கே.எஸ் அழகிரி அறிக்கைவிட்டதே இந்த பிரச்சனைக்கு காரணம்.
மனக்கசப்பு இருந்தால்
காங்கிரஸ் இப்படி பொதுவில் பேசி இருக்க கூடாது. ஏதாவது மனக்கசப்பு இருந்திருந்தால் தனியாக பேசி இருக்கலாம். மாறாக காங்கிரஸ் பொதுவில் அறிக்கை வெளியிட்டு, திமுக குறித்து பேசி இருக்க கூடாது என்று ஸ்டாலின் கருதினாராம். அதனால் தான் நேற்றைய கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லையாம்.
எப்படி பங்கேற்பது
இது தொடர்பாக திமுக எம்பி டிஆர்பாலு கூறுகையில், கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லையென கே.எஸ்.அழகிரி கூறிய பின் காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்? கூட்டணியில் பிரச்னை இருந்தால் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலினிடம் நேரில் தெரிவித்திருக்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
கேஎஸ் அழகிரி அறிக்கை
இதனிடையே கேஎஸ் அழகிரி நேற்று மாலையே திமுகவை சமாதானம் செய்யும் விதமாக அறிக்கை வெளியிட்டார். ப சிதம்பரமும் ஸ்டாலினை சமாதானம் செய்யும் வகையில் கேஎஸ் அழகிரியின் அறிக்கைக்கு புதிய விளக்கம் கொடுத்தார். எனினும் இதுவரை சமரசம் ஏற்பட்டதாக தெரியவில்லை.