இன்னும் ஓரிரு நாட்களில்.. திமுகவுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்... கே.எஸ்.அழகிரி பேச்சு
சென்னை: திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்குச் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தொகுதிப் பங்கீடு நாளை அல்லது நாளை மறுநாள் முடிவாகும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், மே மாதம் 2ஆம் தேதி ஐந்து மாநிலங்களுக்கும் ஒன்றாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
திமுக கூட்டணி
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முக்கிய கட்சிகளும் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக தற்போது வரை மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது. மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் இன்று காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி, "தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது விரைவில் முடிவு செய்யப்படும்.
ஓரிரு நாட்களில்
நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும். பேச்சுவார்த்தையில் இரு கட்சிகள் இடையே பெருமளவுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக, திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாகவே நடைபெறுகிறது, இதில் சிக்கல் என வெளியான தகவல் முற்றிலும் தவறானது" என்றார்.
தேர்தல் அறிக்கை
காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை அச்சிடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தற்போது எத்தனை தொகுதிகள் என்பது குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அதன் பின்னரே எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.