EXCLUSIVE: திமுக - காங். கூட்டணிக்கு கிடைத்த அட்டகாசமான பேஸ்மென்ட் இது.. திருநாவுக்கரசர் உற்சாகம்
40 தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் வெல்லும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை: 40 தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அதற்கான அஸ்திவாரமாகத்தான் நடந்து முடிந்த தேர்தலின் வெற்றி அமைந்திருக்கிறது என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநில தேர்தல் முடிவை வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகதான் தேசமே பார்க்கிறது. இப்போது பாஜக தோற்றால் அது நிச்சயம் மக்களவை தேர்தலிலும் தொடரும் என்பதே பொதுவான பார்வையாக உள்ளது. அதன்படி காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி, இனி நாட்டை ஆள்வது ராகுல்காந்திதான் என்பது போன்ற பார்வையும் வெளிப்பட துவங்கி உள்ளது. இந்த தேர்தல் வெற்றியால் அதிக அளவு மகிழ்ச்சி களிப்பில் உள்ளது காங்கிரசார்தான்.
இது நேற்று சத்திய மூர்த்திபவன் களைகட்டியபோதே ஆரம்பித்துவிட்டது. இதன் சந்தோஷத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் பேட்டிகளில் பதிவிட்டு வருகிறார். "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக அவரிடம் பேசினோம். அப்போது காங்கிரசின் வெற்றி மட்டுமல்லாது, தமிழக அரசியல் கூட்டணி குறித்தும் தன் உறுதிபிடிப்பான பதிலை சொன்னார் திருநாவுக்கரசர். அந்த கருத்துக்கள்தான் இவை:
கேள்வி: நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரசின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள் சார்?
ஒரு காலத்தில் இந்த மாநிலங்களில் பாஜக செல்வாக்குடன் இருந்தது. இந்த மாநிலங்களில் எல்லாம் பாஜகவுக்கு தாய்க்கழகங்களாக ஆர்எஸ்எஸ், இந்துத்துவா அமைப்புகள் இருந்தன. ஆனால் இங்கு கிடைத்துள்ள தோல்வி என்பது மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் மக்களை ஏமாற்றி, கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மக்களை புறக்கணித்தற்கான தண்டனையாகதான் இப்போது மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.
கேள்வி: பாஜகவின் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது எது என்று நினைக்கிறீர்கள்?
மத்திய அரசால், சாதாரண ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், தலித் மக்கள், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் இப்படி எந்ததரப்பு மக்களும் பலனடையவில்லை. ஒரு சில கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள் மட்டுமே பலனடைந்து இருக்கிறார்கள். அதனால்தான் மக்கள் தங்களது ஆத்திரத்தை காட்டி இருக்கிறார்கள். மாநிலத்தில் இருக்கக்கூடிய தங்கள் அரசுகளும் ஊழல் அரசாக மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தன. நிறைய கிராமப்புற மக்களை, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை கவனிக்காத அரசுகளாக இருந்துவிட்டன. அதனால்தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது இந்த தேர்தலின் மூலம் பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ்தான் என்பதும், பிரதமர் மோடிக்கு மாற்று ராகுல் காந்திதான் என்பதும் மக்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: வரப்போகிற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறவு எப்படி உள்ளது?
ரொம்ப பலமாகவே உள்ளது. வரப்போகிற தேர்தலில் திமுக-காங்கிரஸ் உறுதியாகவே உள்ளது. ஏற்கனவே டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திலும், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு இருக்கிறார். அப்போது திமுக, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணிக்கான வலுவான அஸ்திவாரம் இடப்பட்டுள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களில் ஏற்பட்டிருக்கிற காங்கிரசுக்கு கிடைத்திருக்கிற வெற்றியும் அதற்கான அஸ்திவாரமாக அமைந்திருக்கிறது. எனவே தமிழகத்தில் திமுகவுடன் எங்கள் கூட்டணி வலுவாகவே உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெறும்.
கேள்வி: திமுகவுடன் உறவை முறித்துவிட்டு, வந்தால், காங்கிரசுடன் இணைய தயார் என டிடிவி தினகரன் ஒருமுறை சொல்லியிருந்தாரே??? இதை பற்றி உங்கள் கருத்து என்ன?
அது அவரது கருத்து. கூட்டணியில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் எழவில்லை. நான் இதற்கு முன்பும் இதற்கு பதில் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாகவே உள்ளது" என்றார்.