வாஜ்பாய் வாழ்த்திய... சேது சமுத்திர திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் -டி.ஆர்.பாலு
சென்னை: இந்தியாவின் பாதுகாப்பு கருதி சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் சேது சமுத்திர திட்டம் என்பது அடல் பிஹாரி வாஜ்பாயின் கனவுத்திட்டங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலத்திற்கு சேதம் ஏதுமின்றி ஏற்கனவே தேர்வு செய்த வழிதடத்தில் இந்த திட்டத்தை தொடங்குமாறு டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் விழா
கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி சேது சமுத்திர திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மதுரையில் நடைபெற்றது. ரூ.2400 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டாலும், இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்தவர் வாஜ்பாய். இந்நிலையில் சேது சமுத்திர திட்டத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் உருவாகி நீதிமன்றம் வரை சென்றதால் இந்த திட்டம் இப்போது கிடப்பில் உள்ளது.
சேது சமுத்திர திட்டம்
இந்நிலையில் சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது திமுக. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு திமுக எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதத்தில், சேது சமுத்திர திட்டம் விரைந்து நிறைவேற வேண்டும் என வாழ்த்துக் கூறியவர் வாஜ்பாய் என்றும், அவரது கனவுத்திட்டங்களில் இதுவும் ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலத்திற்கு சேதம் ஏதுமின்றி ஏற்கனவே தேர்வு செய்த வழிதடத்தில் இந்த திட்டப்பணிகளை தொடங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
2024-ம் ஆண்டுக்குள்
''நீங்கள் தமிழகத்துக்கு வழங்கிய ஈடு இணையற்ற கொடையாக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும்'' என பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் டி.ஆர். பாலு. இந்தியாவின் சர்வதேச கப்பல் போக்குவரத்து மட்டுமல்லாமல் தேசப்பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தனது கடிதத்தில் டி.ஆர்.பாலு சுட்டிக்காட்டியுள்ளார். வரும் 2024-ம் ஆண்டுக்குள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்து கப்பல் பயணிக்க வழி வகுத்துக்கொடுக்க வேண்டும் என உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
சீனா இலங்கையுடன் வேகமாக நெருக்கத்தை அதிகப்படுத்தி வருவதாகவும், தமிழக எல்லையில் இருந்து முப்பதே கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கையில் சீனா பெரியளவில் முதலீடுகள் செய்து வருவதை கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் டி.ஆர். பாலு பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் சொல்லப்போனால் தேசப்பாதுகாப்பு அச்சத்தின் அடிப்படையிலேயே இந்த திட்டத்துக்கான ஒப்புதலை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஏற்கனவே வழங்கியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.