வி.பி. துரைசாமியிடம் இருந்து திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு! அந்தியூர் செல்வராஜ் நியமனம்!
வி.பி. துரைசாமியிடம் இருந்து திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு! அந்தியூர் செல்வராஜ் நியமனம்!
சென்னை: தமிழக சட்டசபை முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமியிடம் இருந்து துணைப் பொதுச்செயலர் பதவியை திமுக பறித்துள்ளது. வி.பி. துரைசாமிக்குப் பதில் ராஜ்யசபா எம்.பி.யான அந்தியூர் செல்வராஜ், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்தார் வி.பி. துரைசாமி. அண்மைக்காலமாக திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார் துரைசாமி.
தமக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகனை நேரில் சந்தித்து வி.பி. துரைசாமி வாழ்த்து தெரிவித்தார்.
அத்துடன் திமுக தலைமையை விமர்சித்தும் பேட்டிகளை கொடுத்து வந்தார் விபி துரைசாமி. இதனால் அவர் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது கட்சி பதவி மட்டுமே வி.பி.துரைசாமியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
முருகனுடனான சந்திப்பு குறித்து விளக்கம் கேட்டு விரைவில் விபி துரைசாமிக்கு திமுக தலைமைக்கழகம் நோட்டீஸ் அனுப்பும் எனக் கூறப்படுகிறது. திமுக தலைமைக்கு வி.பி.துரைசாமி அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அவர் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Exclusive: திமுகவில் எ.வ.வேலு தான் "செயல் தலைவர்"... வி.பி.துரைசாமி பரபரப்பு பேட்டி!
அந்தியூர் செல்வராஜ் நியமனம்
இதனிடையே வி.பி.துரைசாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜ்யசபா எம்.பி. அந்தியூர் செல்வராஜுக்கு கொடுத்துள்ளார் ஸ்டாலின். அந்தியூர் செல்வராஜும், வி.பி.துரைசாமியும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.