பாஜகவில் இணைகிறாரா வி.பி.துரைசாமி...? சர்ச்சையை ஏற்படுத்திய சந்திப்பு... பின்னணி என்ன?
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளராக உள்ள வி.பி.துரைசாமி, பாஜக மாநில தலைவர் எல்.முருகனை நேற்று சந்தித்து பேசியது தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
திமுகவில் ராஜ்யசபா சீட் கிடைக்காத அதிருப்தியில் உள்ள வி.பி.துரைசாமி பாஜகவில் இணைவதற்கான சமிஞ்கையாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.
இதனிடையே நேற்று மாலை முதல் வி.பி.துரைசாமி தனது அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துக்கொண்டதால், அவர் ஏதோ ஒரு முடிவுடன் தான் செயல்படுகிறார் என அறிவாலயத் தரப்பில் கூறப்படுகிறது.
திருச்சியில் தேடி தேடி உதவும் அதிமுக.. களத்தில் கலக்கும் அதிமுக மாவட்ட செயலாளர் ரத்தினவேல்!
கட்சியில் சீனியர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த வி.பி.துரைசாமி திமுகவில் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். எம்.எல்.ஏ., எம்.பி., துணை சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் அவர் திமுக மூலம் வகித்துள்ளார். அண்ணா அறிவாலயத்திற்கு நாள் தவறாமல் வரக் கூடிய நிர்வாகிகளில் வி.பி.துரைசாமியும் ஒருவர். தன்னை சந்திக்கும் நிர்வாகிகளிடம் நகைச்சுவை ததும்ப பேசக்கூடியவர். அண்மைக்காலமாக சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வருகிறார்.
அந்தியூர் செல்வராஜ்
இந்நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்ற வி.பி.துரைசாமியின் கனவு நிறைவேறவில்லை. இந்தமுறை தனக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் தன்னால் முடிந்தவரை அழுத்தம் கொடுத்தார். ஆனால் இறுதியில் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் பெயரை டிக் அடித்தார் ஸ்டாலின். அப்போதே அவர் தனது அதிருப்தி குரலை வெளிப்படுத்த நினைத்திருக்கிறார். ஆனால் சீனியர்கள் சிலர் அவரிடம் பேசி சமாதானம் செய்திருக்கிறார்கள்.
நேரில் வாழ்த்து
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்றதற்காக அவரை சந்தித்து வி.பி.துரைசாமி வாழ்த்துக் கூறியதாக தெரிவிக்கப்பட்டாலும், முருகன் பொறுப்பேற்று மூன்று மாதம் கழித்து வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. முருகனும், வி.பி.துரைசாமியும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். இருவரும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர்கள். அந்த அடிப்படையில் அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே அறிமுகமும், தொடர்பும் இருந்து வந்தது.
வாய்ப்பில்லை
வி.பி.துரைசாமி என்ன முடிவெடுத்தாலும் சரி அதனை தடுக்கவேண்டாம் என முக்கிய நிர்வாகிகளிடம் கூறிவிட்டாராம் மு.க.ஸ்டாலின். முரசொலி நிலம் விவகாரத்தில் தனக்கு சம்மன் அனுப்பி, திமுகவின் இமேஜை சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கியவர் எல்.முருகன் என்பதை ஸ்டாலின் இன்னும் மறக்கவில்லையாம். இப்படிப்பட்ட நபரை தேடிச்சென்று சந்தித்து அதன் புகைப்படத்தை துரைசாமி வெளியிடுகிறார் என்றால் இதற்கு மேல் அவர் இங்கிருந்து என்ன பயன் எனக் கூறிவிட்டாராம் ஸ்டாலின்.
மதிப்பதில்லை
இதனிடையே இது தொடர்பாக மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, ''வி.பி.துரைசாமி ஏதோ ஒரு முடிவெடுத்துவிட்டார் என்று கருதுகிறேன். அது அவருக்கு தான் பாதகமாக சேரும். இவர் சென்னையில் குடியிருக்கும் நிலையில், நாமக்கல் மாவட்ட அரசியலில் தன்னை கேட்டு தலைமை முடிவெடுக்கவில்லை என கருதுவது தவறு. அதேபோல், கட்சி மூலம் கிடைத்த அனுபவித்த பதவிகளை மறப்பது அவருக்கு பண்பல்ல. உங்களை போல் தான் நானும் அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளார்'' எனக் கூறினார்.