கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அதிருப்தியில் திமுக... காரணம் என்ன?
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகள் மீதும் கடுமையான அதிருப்தியில் உள்ளது திமுக தலைமை.
முரசொலி அலுவலகம் விவகாரத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அடக்கி வாசித்தது திமுக முன்னணி நிர்வாகிகளை குறிப்பாக ஆ.ராசா போன்றோரை கோபம் அடையச் செய்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இந்தியா முழுவதும் இருந்தும் மொத்தம் 5 எம்.பி.க்கள் தான் நாடாளுமன்றத்தில் உள்ளனர். அதில் 4 திமுக கூட்டணியில் போட்டியிட்டு தமிழகத்தில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சமி விவகாரம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 2 கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் திமுக நாளிதழான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதை இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேடிக்கை பார்த்ததை திமுக முன்னணி நிர்வாகிகளால் ஜீரணிக்கமுடியவில்லை.
அறிக்கைகள்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மட்டும் அவ்வப்போது இது தொடர்பாக எதிர்ப்பு அறிக்கைகளும், ஊடகங்களில் பேட்டியளிக்கும் போது திமுகவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகளோ பெயருக்கு ஒரு அறிக்கையை ஒரு நாள் வெளியிட்டதோடு சரி, அதைப்பற்றி மற்ற இடங்களில் வாயே திறக்கவில்லை.
உண்மையில்லை
பஞ்சமி நிலப் புகார் உண்மையில்லை என்பதால் அது குறித்து உரக்கப் பேசியிருக்க வேண்டாமா கம்யூனிஸ்ட் கட்சிகள் என்பது திமுகவினரின் கேள்வியாக உள்ளது. மேலும், இதுமட்டுமல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேறு சில செயல்பாடுகளும் திமுகவை உரசி பார்க்கும் வகையில் உள்ளது.
தலைவர் அறிவார்
இது தொடர்பாக அண்ணா அறிவாலய நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, திமுக மீதும், தலைவர் ஸ்டாலினின் மிசா சிறைவாசம் பற்றியும், அபாண்ட பழியை போட்டு மக்கள் பிரச்சனைகளை அதிமுக அரசு தந்திரமாக திசை திருப்பியது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி மீது இப்படி வீண்களங்கத்தை சுமத்துவோருக்கு உரிய பதில் கொடுக்காமல் ஒரு சில கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தது ஆச்சரியத்தை அளித்தது எனக் கூறினார்.