பிப்.17-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... உட்கட்சி தேர்தல் பற்றி ஆலோசனை
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பிப்ரவரி 17-ம் தேதி(வரும் திங்கள்கிழமை) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. வரும் 17-ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. உட்கட்சி தேர்தல் தொடர்பாகவும், மாவட்டங்களில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என தெரிகிறது. பல மாவட்டங்களில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் முதல்முறையாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து, காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தரப்படாது என்ற அறிவிப்புகளை வரிசையாக வெளியிட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் பல அதிரடி அறிவிப்புகள் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டில் இடம்பெறக் கூடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவின் இமேஜை உயர்த்தும் வகையில் முதல்வர் அறிவிப்புகளை வெளியிட்டு வரும் சூழலில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கையசைவில் மெசேஜ் அனுப்பிய விஜய்.. மறுநாளே வரித்துறை சம்மன்.. அரசியலுக்கு 'இழுக்கப்படும்' விஜய்!
இதனிடையே பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் இன்னும் ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் தங்களை திருத்திக்கொள்ளவில்லை என்ற தகவலும் ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது. இது குறித்து தனிக்கதையாக பார்க்கலாம், ஆனால் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதுபற்றியும் இறுதி எச்சரிக்கை விடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக திமுக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளை கண்காணித்து அவர்களை மக்கள் பணி மற்றும் தொகுதிப்பணிகளில் மாவட்டச் செயலாளர்கள் முடுக்கிவிடுமாறு இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்படும் எனத் தெரிகிறது.