அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த பணி நியமனங்கள்... சிபிஐ விசாரணை கோரும் திமுக
சென்னை: அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வி.ஏ.ஓ. தேர்வு முதல் இளநிலை பொறியாளர் நியமனம் வரை அதிமுக ஆட்சியில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், என்.பி.ஆருக்கு எதிராக தமிழ்நாட்டில் மக்களைத் திரட்டி, காந்திய வழியில், ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3 தீர்மானங்கள்
பரபரபான அரசியல் சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாவட்ட வாரியாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பியதற்காக மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் பாராட்டும், நன்றியும் கூறினார். அதனை தொடர்ந்து 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒத்துழையாக இயக்கம்
என்.பி.ஆருக்கு எதிராக தமிழ்நாட்டில் மக்களைத் திரட்டி, காந்திய வழியில், ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குடியுரிமை போராட்டத்தை எதிர்த்து போராடுபவர்களை முதலமைச்சர் கொச்சைப்படுத்திவிட்டார் என்றும், இதற்காக திமுக கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ விசாரணை
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த அரசுப் பணிகளுக்கான பல்வேறு தேர்வுகளும், நியமனங்களும் ஊழலுக்குப் புதியதொரு வரலாறு எழுதியுள்ளதாக விமர்சிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் நிகழ்ந்துள்ள பணி நியமன முறைகேடுகளை சி.பி.ஐ. விசாரித்திட வேண்டும் வலியுறுத்தப்பட்டது.
சட்டம் இயற்றுக
டெல்டாவில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்யும் வகையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழக அரசுவிவசாயிகளை ஒட்டு மொத்தமாக ஏமாற்றி, ஒரு கபட நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பதாக மாவட்டச் செயலாலர்கள் கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.