நாளை மறுநாள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... அரசியல் நிலவரம் பற்றி ஆலோசனை..?
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் இக்கூட்டம் வியாழக்கிழமை (30-ம் தேதி) மாலை 4.30 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பரபரப்புக்கு மத்தியில் நடைபெறும் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அரசியல் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் கட்சிப் பணிகள் பற்றி இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து ஆலோசிப்பார் எனக் கூறப்படுகிறது.
மேலும், அண்மைக்காலமாக திமுகவில் மாவட்ட அளவில் எழுந்துள்ள உட்கட்சிப் பிரச்சனைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே அறிக்கை பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் அதன் அடிப்படையில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் கேள்விகள் எழுப்பக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
8 புதிய நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.. 24,870 பேருக்கு வேலைவாய்ப்பு!
இதனிடையே சமூக வலைதள செயல்பாடுகள் குறித்தும் திமுக மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் விவகாரங்களில் சர்ச்சைகளில் சிக்காமல் கவனமுடன் இருக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் இந்தக் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கடும் என எதிர்பார்க்கப்படுகிறது.