திமுக கூட்டணியில் அடுத்த சலசலப்பு.. தமிழகத்திலும் காங்கிரஸை கழற்றிவிட மா.செ.க்கள் வலியுறுத்தல்
சென்னை: புதுச்சேரியை போல தமிழகத்திலும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழற்றிவிடலாம் என திமுக மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம், புதுவைக்கான சட்டசபை தேர்தல்களில் திமுக தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸும் இடம் பெற்றிருக்கிறது. கடந்த சில நாட்களாக புதுவையில் காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழற்றிவிடும் நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருகிறது.
புதுச்சேரியில் திமுக தனித்து களமிறங்குவது அல்லது என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது என்கிற முடிவில் இருக்கிறது. இதற்கான முன்னோட்டமாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமையில் 2 நாட்களுக்கு முன்னர் திமுக ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி தேர்தல்: அதிமுக அணிக்கு 14 முதல் 18; காங்- திமுகவுக்கு 12 முதல் 16 இடங்கள்: ஏபிபி சர்வே
புதுவை திமுக நிலை
புதுச்சேரியில் திமுகவின் முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் முன்னிறுத்தப்படுவதையே இந்த கூட்டம் உறுதி செய்தது. ஆனால் இது கட்சிப் பணிதான்; தேர்தல் பணி அல்ல. இதனை கூட்டணியோடு குழப்பி கொள்ள வேண்டாம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
திமுக மா.செ.க்கள் கூட்டம்
இந்த நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் புதுச்சேரி பாணியில் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட வேண்டும் என வலியுறுத்த மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம்.
காங்-க்கு திமுகவில் எதிர்ப்பு
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு என தனி செல்வாக்கு எதுவும் இல்லை; ஒவ்வொரு தொகுதியிலும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான் காங்கிரஸில் இருக்கின்றனர்; அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் பெரும்பாலும் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுமே வெல்ல வாய்ப்புள்ளது. அதற்கு ஏன் நாம் இடம் கொடுக்க வேண்டும் என்பது இந்த மாவட்ட செயலாளர்களின் கருத்து என கூறப்படுகிறது.
காங். ஏன் தேவை?
அதேநேரத்தில் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவை மாநில கட்சிகள் அனைத்தும் எதிர்க்கும்; அப்போது காங்கிரஸை முன்னிறுத்திதான் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதனால் காங்கிரஸும் கூட்டணியில் இருக்கட்டும்.. குறைவான தொகுதிகளை மட்டும் கொடுக்கலாம் என்கிற கருத்தையும் சில மாவட்ட செயலாளர்கள் கூறி வருகின்றனராம்.
எதிர் விளைவுகள் வரும்
இருந்தபோதும் புதுவையில் காங்கிரஸை கழற்றிவிட்டதே பாஜகவை திருப்திபடுத்ததான் என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன; இந்த நிலையில் தமிழகத்திலும் காங்கிரஸை ஒதுக்கிவைத்தால் பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டுதான் திமுக இதை செய்கிறது என பகிரங்கமாகவே விமர்சனங்கள் வந்துவிடும். அது நிச்சயம் தேர்தலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். பாஜகவை எதிர்க்க காங்கிரஸை வேறுவழியே இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தும் திமுக தலைமைக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம்.
அச்சத்தில் கூட்டணி கட்சிகள்
திமுகவின் இந்த தடாலடி வியூகங்களால் தங்களுக்கு எத்தனை இடம் கிடைக்கும்? தங்களையும் திமுக கழற்றிவிடக் கூடுமோ என்கிற அச்சம் அதன் கூட்டணி கட்சிகளிடையே இருக்கிறதாம். சென்னையில் நாளை நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படப் போகிறது என்பதை அதிமுகவை விட கூட்டணி கட்சிகள்தான் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிகிறது.