சேலம், நாமக்கல்லை தொடர்ந்து கோவை திமுகவிலும் அதிரடி மாற்றங்கள்- மாநகர் மாவட்டம் 2 ஆக பிரிப்பு
சென்னை: கோவை மாநகர் மாவட்ட திமுகவை 2 ஆக பிரித்து அதிரடி மாற்றங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.
2016 சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு படுதோல்வி ஏற்பட்டது. இதனால் 2016-ல் ஆட்சி அமைக்கும் வாய்ப்பையே திமுக இழந்தது.
இதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றியைப் பெற்ற திமுகவால் கொங்கு மண்டலத்தில் வெல்ல முடியவில்லை. இது தொடர்பாக திமுகவின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அப்போதே கொங்கு மண்டல திமுக நிர்வாகிகள் மீதான அதிருப்தியை கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து சேலம், நாமக்கல் மாவட்ட திமுகவில் அதிரடி மாற்றங்களை நேற்று அறிவித்தார் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அன்பழகன்.
இந்நிலையில் கோவை திமுகவிலும் அதிரடி மாற்றங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. கோவை மாநகர் மாவட்ட திமுக 2-ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
’கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவிப்பு’
— DMK (@arivalayam) February 4, 2020
கோவை மாநகர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.#DMK pic.twitter.com/DVbZSuqOFO
57 வார்டுகளுடன் செயல்பட்டு வரும் தற்போதைய கோவை மாநகர் மாவட்டத்தில் மேலும் 14 வார்டுகள் சேர்க்கப்பட்டு 71 வார்டுகள் கொண்ட கோவை மாநகர் கிழக்கு மாவட்டமாக அமையும். இதன் பொறுப்பாளராக நா. கார்த்திக் எம்.எல்.ஏ. தொடர்ந்து செயல்படுவார்.
29 வார்டுகளுடன் கோவை மாநகர் மேற்கு மாவட்டம் உருவாக்கப்பட்டு இதன் பொறுப்பாளராக மு. முத்துசாமி நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே செயல்பட்டு வரும் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக சி. ராமச்சந்திரனும் தெற்கு மாவட்ட செயலாளராக தென்றல் செல்வராஜும் தொடர்ந்து செயல்படுவார்கள். இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.