EXCLUSIVE: "புரியவே இல்லீங்க.. ஊரடங்குக்குள்ள ஒரு ஊரடங்கா.. ஏன் பயமுறுத்தறீங்க.. பூங்கோதை வேதனை!
மக்களிடம் விழிப்புணர்வு அதிகம் தேவை என பூங்கோதை எம்எல்ஏ கேட்டுக் கொண்டுள்ளார்
சென்னை: "எனக்கு அர்த்தமே புரியவே இல்லீங்க.. சென்னையில 4 நாள் லாக் டவுனா? எதுக்காக ஊரடங்குக்குள்ள ஒரு ஊரடங்கு? ஏற்கனவே நாம லாக்டவுனில்தானே போயிட்டு இருக்கோம்.. அப்பறம் ஏன் திடீரென அதன் தன்மையை குறைக்கறீங்க? அதிகப்படுத்தறீங்க? லாக்டவுனை போட்டு அதிமுக பயமுறுத்துகிறதே தவிர, விஞ்ஞானப்பூர்வமாக எதையும் அணுகவில்லை.. இந்த ஊரடங்கிற்குள் ஊடங்கு எந்த அடிப்படையில் அமல்படுத்துகிறது என்பதை விளக்க வேண்டும்" என்று திமுகவின் பூங்கோதை ஆலடி அருணா காட்டமான கேள்வியை எழுப்பி உள்ளார்.
Recommended Video
கொரோனாதடுப்பு பரவல் மற்றும் அனைத்து மருத்துவம் குறித்த ஆலோசனைகள், விழிப்புணர்வுகள் திமுக சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.. சுகாதாரத்துறை ஒரு பக்கம் வீரியத்துடன் செயலாற்றினாலும், திமுக தரப்பில் மருத்துவர் அணி சார்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அதுகுறித்து அக்கட்சியின் ஆலங்களும் எம்எல்ஏவும், மருத்துவர் அணி தலைவருமான டாக்டர் பூங்கோதை ஆலடி அருணாவை சந்தித்து பேசினோம்.. கழகம் சார்பாக என்ன மாதிரியான மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதையும், கொரோனா தடுப்பு விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பலவற்றையும் "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக கேட்டறிந்தோம்!
கேள்வி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் திமுக தரப்பில் எடுக்கப்படும் மருத்துவ ரீதியான பணிகள் என்ன?
இப்படி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த முழு முதற் காரணமே கழக தலைவர் ஸ்டாலின்தான்.. அவரது ஆலோசனைபடிதான் இதை நாங்கள் செயல்படுத்திட்டு வர்றோம்.. முதலில் கொரோனாவுக்கான போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.. இதற்காகவே தமிழகம் முழுவதும் நாங்கள் இலவச விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறோம்.. திமுக சார்பில், மாவட்ட அமைப்பாளர்கள் இந்த பணியினை சிறப்பாக செய்து வருகிறார்கள்.. இப்போ பார்த்தீங்கன்னா, 100 பேருக்கு கொரோனா இருந்தால் 2, 3 பேர்தான் வென்டிலேருக்கு போக சான்ஸ் இருக்கு.. அதனால தைரியமா டெஸ்ட் பண்ணிக்குங்கன்னு மக்களிடம் சொல்றோம்.. திமுக மருத்துவர் அணி தரப்பில், யாருமே நாங்க கிளீனிக்குகளை க்ளோஸ் பண்ணல.. முழு நேரமும் இயங்கிட்டு வர்றோம்.. எங்கே போய் கோவிட் டெஸ்ட் பண்ணனும்னு கூட தெரியாம நிறைய பேர் இருக்காங்க.. அவங்களுக்கு வழிகாட்டுதலாவும், உறுதுணையாவும் இருந்து உதவி செய்துட்டு வர்றோம். திடீரென மாஸ்க் வேணும்னு போன் வரும், அதை ஏற்பாடு செய்து தர்றோம்..
கேள்வி: கொரோனாவை தவிர்த்து மற்ற உடல்ரீதியான பிரச்சனைகளுக்கும் ஆலோசனை தருகிறீர்களா?
ஆமா.. இது கொரோனாவுக்கான விழிப்புணர்வுக்காக ஏற்படுத்தப்பட்டாலும், அதை தவிர சில நேரம் கர்ப்பிணி பெண்கள் போன் பண்ணுவாங்க.. ஸ்கேன் எடுக்கறதுல பிரச்சனை, ஆம்புலன்ஸ் கிடைக்கிறதுல பிரச்சனை என்று சொல்வார்கள்.. இதுபோன்ற கர்ப்பிணிகளுக்கு உதவி செய்துட்டு வர்றோம்.. ஏன்னா ஆம்புலன்ஸ்களுக்கு கூட நிறைய விதிகள் இருக்கு.. உடனே நாங்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி ஆம்புலன்ஸ் தர சொல்றோம். என் தொகுதியிலேயே, ஒரு கேன்சர் நோயாளி மருந்து வாங்க வெளியூர் போக வேண்டிய சூழல்.. அவருக்கு மருந்து வாங்கிற அளவுக்கு பொருளாதார வசதியும் இல்லை.. அதனால நாங்களே 3 மாசத்துக்கு தேவையான மருந்துகளை அவருக்கு வாங்கி தந்திருக்கோம். மருந்துகள் கிடைக்க, நோய் கவசங்கள் கிடைக்க உதவிட்டு இருக்கோம்.. சில அரசு டாக்டர்களே எங்ககிட்ட உதவி கேட்டு அதை நாங்க செஞ்சு தந்திருக்கோம். இதனால் ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கானோர் பலன் அடைஞ்சிட்டு இருக்காங்க.
கேள்வி: ஊரடங்கு தளர்வு, நீட்டிப்பு, பரிசோதனைகள், இப்படி தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?
முதலில் அரசு தரப்பில் தெளிவாக இருக்கணும்... மக்களிடம் வெளிப்படைத்தன்மையுடன், உண்மையாக சொல்ல வேண்டும்.. "இந்த கொரோனா பயப்பட கூடிய விஷயமே இல்லை.. யாரையெல்லாம் டாக்டர்கள் டெஸ்ட் செய்துக்க சொல்கிறார்களோ, அவர்கள் எல்லாம் உடனே டெஸ்ட் செய்துக்கணும்.. 98-ல் இருந்து 99 சதவீதம் வரை எந்த பாதிப்பும் இதனால் உங்களுக்கு ஏற்படாது" அப்படிங்கிற தைரியத்தை அரசு மக்களிடத்தில் முதலில் ஏற்படுத்தணும்.. இப்போதைக்கு மக்களுக்கு தேவை விழிப்புணர்வுதான்.. இதை உலக சுகாதார நிறுவனமே தெளிவா சொல்லி இருக்கு.. 100 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்தால் 80 பேருக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கவே தேவையில்லை.. 1 லட்சம் பிசிஆர் கிட் இருக்குன்னு இவங்கதானே சொல்றாங்க? ஹாட் ஸ்பாட் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் அந்த டெஸ்ட்டை பண்றதுக்கு இவங்களுக்கு என்னதான் பிரச்சனை? அதிக அளவுக்கு அங்கெல்லாம் முழு பரிசோதனை செய்யணும்.. அப்பதான் நோயின் உண்மையான தாக்கத்தை கண்டறிய முடியும்.
கேள்வி: விழிப்புணர்வு தவிர, தமிழக அரசு வேறு என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கையில் இறங்கலாம்?
முதலில் எனக்கு அர்த்தம் புரியவே இல்லீங்க.. சென்னையில 4 நாள் லாக் டவுனா? எதுக்காக ஊரடங்குக்குள்ள ஊரடங்கு? ஏற்கனவே நாம லாக்டவுனில்தானே போயிட்டு இருக்கோம்.. அப்பறம் ஏன் திடீரென அதன் தன்மையை குறைக்கறீங்க? அதிகப்படுத்தறீங்க? திடீரென ஒரு மாவட்டத்துக்கு லாக்டவுன்? எதனால இப்படி? லாக்டவுனை போட்டு அதிமுக பயமுறுத்துகிறதே தவிர, விஞ்ஞானப்பூர்வமாக, எதன் அடிப்படையில் சென்னையில் 4 நாள் லாக்டவுனை அமல்படுத்துகிறது. ஏன் குழப்பத்தை விளைவிக்கணும்? சென்னையில் ஒரே ஒருநாள் 6 மணியில் இருந்து 12 மணி வரை என்றார்கள், பிறகு 3 மணி வரை என்றார்கள்.. பிறகு காய்கறியும், பாலும் கிடைக்கும் என்று 5 மணிக்கு அறிக்கை விடுகிறார்கள்.. கடைசியில் சென்னையில் கூட்டத்தை பார்த்தீங்க இல்லை... நோய் அதிகமாகத்தானே செய்யும்? இந்த மாதிரி தெளிவற்ற தன்மையால்தான் நோய் எண்ணிக்கை அதிகமாகிட்டே இருக்கு. இந்த ஊரடங்கிற்குள் ஊரடங்கு எந்த அடிப்படையில் அமல்படுத்துகிறது என்பதை அரசு விளக்க வேண்டும்" என்று கோரிக்கையுடன் சொல்லி முடித்தார் எம்எல்ஏ பூங்கோதை!
இதையடுத்து மாவட்ட அமைப்பாளர்கள் இந்த ஹெல்ப்லைன் மூலம் எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதை அறிய முற்பட்டோம்.. அதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் மாலதி நாராயணசாமியை சந்தித்து இதை பற்றி கேட்டோம். அவர் நமக்கு சொன்னதாவது: "திமுக தலைவரின் அறிவுறுத்தல் படியும், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணாவின் ஆலோசனைபடியும் இந்த பணியை நாங்கள் செய்து வர்றோம்.. கொரோனா பரவலை தடுக்க 144 தடை சட்டம் வந்தது முதலே நாங்கள் எங்க ஆஸ்பத்திரியில் மிக தீவிரமாக வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் மருத்துவர் அணியை 12 மண்டலமாக பிரித்து அதன்வாயிலாக ஆன்லைன் மூலமாக சிகிச்சை வழங்கி வர்றோம். நான் 8-வது மண்டலத்தில் இலவச எண்ணை தந்து பதிவு செய்து அதன்மூலம் பணியாற்றி வர்றேன்.. அனைத்து மாவட்ட அமைப்பாளர்களும், துணை அமைப்பாளர்களும் சுமார் 13 பேர் இந்த 8வது மண்டலத்தில் பதிவு செய்து வேலை பார்க்கிறோம்.
கொரோனா மட்டுமல்லாமல், வேறு எந்த நோய் இருந்தாலும் அது குறித்த மற்ற சந்தேகங்களையும் எங்களிடம் கேட்டறிகிறார்கள்.. இந்த தருணத்தில் அரசு மருத்துவமனைக்கு சென்றால், அங்கே தொற்று பாதித்துவிடுமோ என்ற அச்சத்தில் இருப்பவர்களுக்கும், தனியார் மருத்துவமனைகளையும் பீதியில் மூடியுள்ள நிலையில், எங்கே போவது என்று மக்கள் குழம்பி உள்ளனர்.. இவர்களுக்குதான் நாங்கள் உதவி செய்து வருகிறோம். பொதுமக்களுக்கு இலவச டோல்ஃப்ரீ நம்பர் தந்துள்ளோம்.
நான் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பதால் தினமும் குறைந்தது 10 முதல் 20 கர்ப்பிணிகள் ஆலோசனை கேட்பார்கள்.. முடிந்தவரை போனில் ஆலோசனை தருவோம்.. ஆனால் ஒருசிலருக்கு நோய் பிரச்சனை அதிகமாக இருக்குமாயின், அவர்களை ஆஸ்பத்திரிக்கு நேரில் வரவழைத்து, சமூக விலகலை கடைப்பிடித்து சிகிச்சையும் தந்து வருகிறோம்.. குறிப்பாக பிரசவ தேதி முடிந்து, குழந்தையின் நடமாட்டம், நிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள எங்களிடம் வருவார்கள்.
கர்ப்பிணிகளுக்கு திடீர் உதிர போக்கு, அடிவயிற்று வலி இப்படி அவதிக்குள்ளாகி வருபவர்கள் எங்களிடம் அணுகுகிறார்கள்.. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை தந்து, மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து வருகிறோம்.. இந்த ஒரு மாசத்தில் மட்டும் இந்த மாவட்டத்தில் 1500 நோயாளிகளுக்கு மேல் நாங்கள் உதவி இருப்போம்.. இவங்க எல்லாருமே எங்களுக்கு கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி விட்டு போனார்கள்' என்றார் மாலதி.