கொரோனாவுக்கு எதிரான யுத்தம்... மருத்துவர்கள் படையை களத்தில் இறக்கிய திமுக
சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் முழு வீச்சில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு பக்கபலமாக திமுக மருத்துவர்கள் அணியும் களமிறங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிரான யுத்தத்தில் மருத்துவர்களும், செவிலியர்களும் களத்தில் நின்று போராடி மனிதகுலத்தை காப்பதற்கான ஆகச்சிறந்த அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு வருகின்றனர். உயிரை கூட துச்சமென கருதி சமூக தொண்டாற்றி வரும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஒவ்வொருவரும் கடவுளாக தான் கருதுகின்றனர். இப்படி கொடூர நோயான கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் அறப்பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் திமுக மருத்துவர்கள் அணியை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து மண்டலம் வாரியாக பொதுமக்களுக்கு அலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள அவர்கள், பொதுமக்களின் சந்தேகங்கள், தேவைப்படும் உதவிகள், மருத்துவ அறிவுரைகள், தொடர்பாக அலைபேசி மூலமாகவே அளிக்கின்றனர். இதற்காக 70 பேர் கொண்ட மருத்துவர்களை இந்த பணியில் ஈடுபடுத்தியுள்ளது திமுக.
இது தொடர்பாக திமுக மருத்துவர் அணி செயலாளர் பூங்கோதை ஆலடி அருணாவை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, '' எங்கள் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில் நாங்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம். இன்று கூட திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து டயாலிஸிஸ் செய்து வரும் ஒருவர் என்னை அழைத்து, டயாலிஸிஸ் மையத்திற்கு சென்று வர ஆம்புலன்ஸ் கிடைப்பது அரிதாக உள்ளது, ஆகையால் தமக்கு மாற்று உதவி வேண்டும் எனக் கேட்டார். உடனடியாக எங்கள் திருவள்ளூர் மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகியை தொடர்பு கொண்டு தகவலை கூறினேன், அவர் அந்த நபர் கூறிய தகவலை உறுதிபடுத்திய பின்பு ஆட்டோவில் செல்வதற்காக ரூ.6,000 உதவித் தொகை வழங்கியுள்ளோம்.
டெல்லி கூட்டத்தால் கொரோனா.. கோவை, ஈரோடு மாவட்டத்தில் சல்லடை போட்டு தீவிரமாக தேடும் சுகாதாரத்துறை
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ''இதுமட்டுமல்லாமல் எங்கள் குழுவில் மகப்பேறு மருத்துவர்கள் உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் பலரும் அலைபேசி மூலம் அழைத்து ஆலோசனைகள் கேட்கின்றனர். மேலும், யாராவது காய்ச்சல் உள்ளிட்ட சில பிரச்சனைகள் இருப்பதாக கூறினால் நாங்களே அவர்களை அரசு மருத்துவமனைக்கு சென்று உடனடியாக சோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்'' என்றார்.
கொரோனா சிகிச்சை வார்டாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கலைஞர் அரங்கை இன்று காலை மு.க.ஸ்டாலின் வழங்கிய நிலையில், அடுத்தகட்டமாக மருத்துவர் அணியையும் களமிறக்கியுள்ளார்.