சேது சமுத்திரத் திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்… திமுக தேர்தல் அறிக்கை
Recommended Video
சென்னை: கடந்த பல ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள சேது சமுத்திரத் திட்ட பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு, விரைந்து நிறைவேற்றப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019- நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுக கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. அந்த வகையில் சேது சமுத்திரத் திட்டப்பணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டுமல்ல.. இனி திருச்சி, சேலம், கோவை, மதுரையிலும் மெட்ரோ.. திமுக அசத்தல் வாக்குறுதி!
நூற்றாண்டு கால கனவு
சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழர்களின் நூற்றாண்டு கால கனவு. பாக்ஜலசந்தியையும், மன்னார் வளைகுடாவையும் பிரிக்கும் மணல் திட்டுகளை அகற்றினால் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக அப்பகுதி அமைந்துவிடும். இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்பது தென் மாவட்ட மக்களின் எண்ணம்.
2004-ல் சேது சமுத்திரத் திட்டம்
சேது சமுத்திரத் திட்டத்தை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு 2004-ல் துவக்கியது. இத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என்று ஆரம்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதற்கு அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், ராமர் பாலம் பிரச்சனை கிளம்பியதால் திட்ட பணிகள் தொய்வு அடைந்தன.
ஆட்சி மாற்றம்
பல பிரச்சனைகளுக்கு பிறகு மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு, டாக்டர் பச்சோரி தலைமையில் கமிட்டி ஒன்றை நியமித்தது. அவர்களும் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி, மாற்று பாதை ஒன்றை சிபாரிசு செய்தனர். ஆனால், ஆட்சி மாற்றத்தாலும், அரசியல் பிரச்சனைகளாலும் அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டன.
தேர்தல் அறிக்கை
நாடு விடுதலை அடைந்த பின்னரும் கூட அனைத்து கட்சிகளுமே சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரித்தே வந்தன. சில ஆண்டுகள் முன்பு வரை கூட அதிமுக, திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டம் தவறாமல் இடம்பெறக் கூடிய ஒரு விஷயமாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.