பதவியும் பவிசும் முடிவுக்கு வரும் நேரம்... அமைச்சர் உதயகுமார் மீது ஆ.ராசா பாய்ச்சல்
சென்னை: தன்னை பற்றி விமர்சிக்க அதிமுக அமைச்சரவைக்கே தகுதியில்லை இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர்களுக்கு பதவியும் பவிசும் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டதாக அவர் சாடியுள்ளார். அமைச்சர் உதயகுமாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சாத்தான்குளம் மரண வழக்கு.. 5 போலீசாரும் திடீரென மதுரை சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்? என்ன நடந்தது?
சாத்தான்குளம்
உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து சாத்தான்குளத்தில் காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட இரட்டை கொலையை விசாரணைக்கு ஏற்று, கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மூலமாக புலன் விசாரணையை மேற்கொண்டதில்தான், நடைபெற்றது கொடூரமான கொலை என்று தெரியவந்தது. அதுவரை தமிழக முதலமைச்சரைப் பொறுத்தவரை இது மூச்சுத்திணறல் மற்றும் வயோதிகம் காரணமாக ஏற்பட்ட இயற்கை இறப்பு என்றே சொல்லப்பட்டது.
விமர்சிக்க தகுதியில்லை
தன் ஆளுகையில் உள்ள ஒரு காவல் நிலையத்தை, காவல்துறையை நம்பாமல் வருவாய்த்துறைக்கு கீழ் கொண்டுவந்து உண்மையை கொண்டுவர உயர்நீதிமன்றம் எடுத்த முயற்சிகளும் முடிவுகளும் முதலமைச்சரின் ஆளுமைக்கும், அவருடைய நம்பகத்தன்மைக்கும் கொடுக்கப்பட்ட சவுக்கடிகளாகும். அப்படிப்பட்டவருக்கு முட்டுக்கொடுத்து என்னை வசைபாட வேண்டிய அவசியத்திற்கு அமைச்சர் உதயகுமார் ஆளாகியிருப்பது புரியாத புதிரல்ல. இந்த சாமர்த்தியசாலிதான் இப்போது என் தகுதி பற்றி பேசுகிறார். அவருக்கு மட்டுமல்ல; அ.தி.மு.க. அமைச்சரவைக்கே என்ன தகுதி இருக்கிறது?
வாய்தா வாங்கவில்லை
என் மீதான வழக்கை நானே எதிர்கொண்டு ஆண்டுகள் பலவாக ஓடி ஒளியாமல் - ஒரு நாள்கூட வாய்தா வாங்காமல்- நானே சாட்சி கூண்டில் ஏறி , சிபிஐ-யின் குறுக்கு விசாரணையை எதிர்கொண்டு வழக்கை வென்றவன் என்பது மட்டுமல்ல; என் மீது தொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை ‘ஜோடிக்கப்பட்டது' (choreographed charge-sheet) என்று நீதிமன்ற தீர்ப்பிலேயே உறுதி செய்யப்பட்டது என்பது உதயகுமார் போன்ற அரசியல் அடிவருடிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
விரைவில் திமுக ஆட்சி
பாவம், விபத்தில் விளைந்த பதவியும் பவிசும் முடிவுக்கு வரும் நேரம். அணையப்போகும் திரி கடைசி நிமிடத்தில் கூடுதல் வெளிச்சம் காட்டுவது மாதிரி உதயகுமாரின் உளறல் உரத்து ஒலிக்கிறது. விரைவில் அமைய இருக்கும் தி.மு.க. ஆட்சியில் தகுதியற்ற இவர்களின் தகுதி தக்க நேரத்தில் தீர்மானிக்கப்படும். அதுவரையாவது இவர்கள் அமைதி காப்பது அவர்களுக்கு நல்லது.