பேட்டி என்ற பெயரில் அமைச்சர்கள் “பிதற்ற" வேண்டாம்.. திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி சாடல்
சென்னை: பேட்டி என்ற பெயரில் அமைச்சர் உதயகுமாரும், மாஃபா பாண்டியராஜனும் பிதற்ற வேண்டாம் என திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பற்றி விமர்சிக்க அமைச்சர் உதயகுமாருக்கு தகுதியில்லை எனவும் ஐ.பெரியசாமி சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சாத்தான்குளம்- முருகண்ணே..அண்ணிக்கு வருத்தமா இருக்காது?பாஜக தலைவருக்கு திமுக எம்.எல்.ஏ. மனைவி கேள்வி
அக்கறை இல்லை
கொரோனா காலத்தில்- மக்களுக்கு யார் உதவி செய்தாலும், அதை வரவேற்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் கடமை. அதிலும் எதிர்க்கட்சி, மாபெரும் "ஒன்றிணைவோம் வா" என்ற மக்கள் இயக்கத்தை நடத்திய போது- அதை வரவேற்க மனமில்லை என்றாலும், கொச்சைப் படுத்தும் கொடுமையான அரசு, இங்குள்ள அ.தி.மு.க. அரசு. ஏனென்றால் அமைச்சர் திரு. உதயகுமாருக்கோ- முதலமைச்சருக்கோ மக்கள் பணியில் அக்கறை இல்லை.
அரைவேக்காட்டு நிர்வாகம்
கொரோனா மரணம் நோய்த் தொற்றை விட வேகமாக இரட்டிப்பு ஆகிறது என்று இன்று, "டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் "கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 40 சதவீதம் பேர், இரு நாட்கள் கூட மருத்துவமனையில் உயிருடன் இருப்பதில்லை" என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றை ஒழிக்கும் பணியில், அ.தி.மு.க. அரசின் அரைவேக்காட்டு நிர்வாகம் இதுதான்.
அறிக்கைகள்
"பொதுவாழ்வில் இருப்போரை முடக்கிப் போட அறிக்கைகளை விடுகிறார்" என்று கூறும் அமைச்சர் திரு. உதயகுமார், பொது வாழ்வு என்றால், கிலோ என்ன விலை என்று கேட்பவர். "பாரத் நெட்" டெண்டர் திட்ட ஊழல் - எங்கள் கழகத் தலைவர் கூறியது போல், இன்றைக்கு டெல்லி செங்கோட்டை வரை அ.தி.மு.க. அரசின் மானம் காற்றில் பறக்கிறது.
பேட்டி கொடுக்கிறார்
இன்னொரு அமைச்சர்! அவர் பெயர் திரு. பாண்டியராஜன். இனி சந்திரமண்டலத்தில் புதிதாக ஒரு கட்சி துவங்கினால் அங்கும் "துண்டு" போடக் காத்திருப்பவர். ஒரு தலைமைக்கு விசுவாசமாக இருக்க முடியாதவர்- தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழை ஒவ்வொரு நாளும் படுகொலை செய்து கொண்டிருப்பவர், "முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளைத் தெரிந்து கொண்டு முன்கூட்டியே ஆலோசனைகள் என்ற பெயரில் அறிக்கைகளை விடுகிறார்" என்று, பேட்டி கொடுக்கிறார்.
பிதற்ற வேண்டாம்
அவரிடம் நான் கேட்க விரும்புவது; உங்கள் முதலமைச்சரின் முடிவு எடுக்கும் ரகசியம் எங்கள் கழகத் தலைவருக்கு தெரிகிறது என்று சொல்வதற்கே வெட்கமாக இல்லையா?" ஆகவே அமைச்சர்கள் திரு. உதயகுமாரும், திரு. பாண்டியராஜனும் "பேட்டி" என்ற பெயரில் "பிதற்ற" வேண்டாம். பதற்றத்தில் உள்ள மக்களைப் பாருங்கள்.
பட்டினியை போக்க
கொரோனா கால மக்கள் பணியில் ஒரு பிராதன எதிர்க்கட்சி- "ஒன்றிணைவோம் வா" என்று, ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்தி மக்களின் பட்டினியைப் போக்கப் பாடுபட்டுள்ளது என்றால்- இந்தியாவிலேயே அது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்! எங்கள் கழகத் தலைவர் மட்டும்தான்! இவ்வாறு திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.