கூட்டணிக் கட்சிகளுக்கு குட்டு... கே.என்.நேரு ஆதங்கம்
திருச்சி: திமுக மீது அபாண்ட பழிகளை ஆளுங்கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் சுமத்திவரும் நிலையில், அதுகுறித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வாய்திறக்காதது தனக்கு வேதனையை தருவதாக கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் தனது உள்ளக்குமுறலை கொட்டி கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மறைமுக குட்டு வைத்தார்.
அமெரிக்க மனித நேய சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை கி.வீரமணி பெற்றதற்காக திருச்சியில் பாராட்டு விழா நடைபெற்றது.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு திமுக கண்டனம்... தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.அறிக்கை
வாழ்நாள் சாதனையாளர்
திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணிக்கு அமெரிக்காவில் செயல்படும் அமெரிக்க மனிதநேய சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதற்கான பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய திமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.என். நேரு தனது உள்ளத்தில் பட்டதை பட்டவர்த்தனமாக பேசியுள்ளார்.
அவதூறு பரப்புகிறது
அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாக சேர்ந்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும், திமுக மீதும் அபாண்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்கள் மத்தியில் அவதூறு பரப்புவதாகவும், ஆனால் இதற்கு திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரும் பதிலடி தராதது வேதனை அளிப்பதாகவும் கே.என். நேரு கூறினார்.
வியப்பை தருகிறது
கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி மீது சுமத்தப்படும் பழிகளை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது தனக்கு வியப்பையும், ஆச்சரியத்தையும் தருவதாக தெரிவித்தார். மு.க.ஸ்டாலினை துண்டுச்சீட்டை பார்த்து படிப்பதாக கூறுகிறார்கள், முதலமைச்சர் பக்கம் பக்கமாய் எழுதி வைத்துக்கொண்டு படிப்பதாக சாடினார் நேரு.
வரலாறு திரும்பும்
உள்ளாட்சித் தேர்தலில் 1986-ம் ஆண்டு வரலாறு மீண்டு திரும்பும் என நம்பிக்கை தெரிவித்தார். அப்போது எம்.ஜி.ஆர்.ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தை திமுக பிடித்தது என்றும், அதே நிலைதான் இப்போதும் ஏற்படும் எனவும் நேரு கூறினார்.