தலைவர் பதவிக்கு முயற்சித்த பொன்முடி மகன்... முறியடித்த சீனிவாசன்
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ரூபா குருநாத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பதவிக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் லோதா கமிட்டி பரிந்துரைப்படி பல்வேறு சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கிரிக்கெட் சங்கங்களில் ஒருவர் 2 முறைக்கு மேல் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது, 70 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பதவிக்கு வர முடியாது என்பன உள்ளிட்டவைகள் லோதா கமிட்டியின் பரிந்துரைகள் ஆகும்.
அதன்படி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் ஏற்கனவே பதவியில் இருந்தவர்கள் தொடர்ந்து பதவிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. புதியவர்களை தேர்வு செய்ய வேண்டிய சூழல் வந்தது. திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியை கைப்பற்ற காய்கள் நகர்த்தியதாகவும், ஆனால் அந்த முயற்சியை இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் முறியடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் வேறுவழியின்றி துணைத் தலைவர் பொறுப்பை அசோக் சிகாமணி ஏற்றுக்கொண்டாராம். சென்னை கே.கே.நகரில் குழந்தைகள் நல மருத்துவமனை நடத்தும் இவர், பொன்முடியின் இளைய மகன் ஆவார். பள்ளிப்பருவம் முதலே கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் கொண்டவர் அசோக் சிகாமணி. ஒரு கட்டத்தில் இந்திய அணியில் இடம்பெறும் முயற்சியில் எல்லாம் ஈடுபட்டார்.
தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு போட்டியின்றி தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதற்கு இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் தான் காரணமாம். ஒருவேளை போட்டி என நடந்திருந்தால் தலைவர் பதவியை பிடிக்க பொன்முடி மகன் அசோக் சிகாமணி சீனிவாசன் மகள் ரூபாவுக்கு டஃப் கொடுத்திருப்பாராம்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியில் அசோக் சிகாமணி இருக்கட்டும் என, சீனிவாசன் தரப்பில் சமாதானம் பேசப்பட்டதை அடுத்தே அவர் அமைதி காத்தாராம்.