கல்வித்துறையில் துக்ளக் தர்பார்... பள்ளிக்கல்வித்துறை அல்ல பள்ளிக்குழப்பத்துறை... திமுக விமர்சனம்..!
சென்னை: கல்வித்துறையில் 'துக்ளக் தர்பார்' நடப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை பள்ளிக்குழப்பத்துறையாக மாறிவிட்டதாகவும் துறை ரீதியான அறிவிப்பு வெளியிடுவதும் அதை திரும்பப்பெறுவதும் வாடிக்கையாகிவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அக்டோபர் மாத ராசி பலன் 2020: கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி
பள்ளிக்குழப்பத்துறை
முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களின் தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில், பள்ளிக்கல்வித்துறை என்பது, பள்ளிக் 'குழப்பத்' துறையாகவே மாறிவிட்டது என்பதற்குப் பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் துறை அமைச்சரும், அதிகாரிகளும் ஒவ்வொரு நாளும் விடுத்த அறிவிப்புகளும், அதற்கு மறுநாளே விடுத்த மறுப்பு அறிக்கைகளுமே சாட்சியங்களாக இருக்கின்றன.
அரசாணை நிறுத்தம்
இந்தக் குழப்ப விளையாட்டில், தான் எவருக்கும் சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், முதலமைச்சர் அவர்கள் தானும் களத்தில் குதித்து, ஐந்து நாட்களுக்கு முன்னர் தலைமைச் செயலாளர் வெளியிட்ட அரசாணையை இன்றைக்கு நிறுத்தி வைத்து, மருத்துவக் குழு ஆலோசனைக்குப் பின்னர் வகுப்புகள் தொடங்கப்படுவது குறித்தும், பள்ளிகள் திறக்கப்படுவது குறித்தும் முடிவெடுக்கப்படும் என அறிவித்திருக்கின்றார்.
மாணவர்கள் துயரம்
கொரொனா நோய்த்தொற்று சற்றும் குறையாத சூழலில், தமிழக அரசும்,பள்ளிக்கல்வித்துறையும் தீர ஆலோசிக்காமல் மேற்கொள்ளும் அவசர முடிவுகளும்; அதில் அடிக்கடி செய்யப்படும் மாற்றங்களும்; அவற்றால் விளையும் குழப்பங்களும், தமிழ்நாட்டு மாணவர்களையும் அவர்தம் பெற்றோர்களையும், ஆசிரிய சமுதாயத்தையும் சொல்லொணாத் துயருக்கு ஆளாக்குகின்றன.
அரசுக்கு கோரிக்கை
பொதுத்தேர்வுகளை நடத்துவதில் தொடங்கிப் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாகவும், இந்தக் கல்வியாண்டுக்குரிய பாடத்திட்டங்களை இறுதி செய்வதிலும் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை செய்யும் குழப்பங்கள், மாணவர்களின் எதிர்காலம் குறித்துப் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இந்தக் குழப்பங்களுக்கு முடிவு கட்டி, தெளிந்த மனத்துடனும், நம்பிக்கையுடனும், பாதுகாப்புடனும் மாணவர்கள் கல்வி பயிலும் நல்ல சூழலைத் தமிழகத்தில் உருவாக்க அரசு உடனே முன்வரவேண்டும்.