டிஎன்பிஎஸ்சி முறைகேடு.. கைது செய்யப்பட்ட ஐயப்பன் யாருடைய நண்பர் தெரியுமா.. ஜெயக்குமார் அதிரடி
சென்னை: டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் எதிர்காலத்தில் இனி எந்தவொரு தவறு நடக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஓம் காந்தன், சித்தாண்டி, ஜெயக்குமார், ஐயப்பன், என பலரை சிபிசிஐடிபோலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்நிலயில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக அரசு மௌனம் கலைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் ஐயப்பன் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர் திமுக நிர்வாகி அப்பாவுவின் நண்பர் . இதற்கு அப்பாவு என்ன பதில் அளிக்க போகிறார்,
திமுக ஆட்சிக்காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனிய செடிகளை (நெட்வொர்க்குகளை களையெடுக்கிறோம்) அதிமுக அரசு களை எடுத்து வருகிறது. இதுவரை 35க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளோம். எதிர்காலத்தில் எந்தவொரு சிறு தவறும் நடக்காத வகையில் 100 சதவீதம் அரசு நடவடிக்கை எடுக்கும்" என உறுதி அளித்தார்.