10% கோட்டா சட்டத்திற்கு எதிர்ப்பு.. சென்னை ஹைகோர்ட்டில் திமுக வழக்கு!
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்து இருக்கிறது.
சென்னை: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்து இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இத்தனை வருடங்கள் சாதி ரீதியான இடஒதுக்கீடு இருந்தது போல தற்போது உயர் சாதியினர் மட்டும் பயன்பெறும் வகையில் பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்மூலம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது. இதற்கான மசோதா ராஜ்ய சபா, லோக் சபா இரண்டிலும் வெற்றிபெற்றது.
திமுக வழக்கு
இதன் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. சில மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்து இருக்கிறது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிக முக்கியம்
திமுக தனது மனுவில், இடஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிக்க கொண்டு வந்தது கிடையாது. பல வருடங்களாக சாதிய ரீதியாக இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை களைய கொண்டு வந்தது. சாதி ரீதியாக பின்தங்கி இருப்பவர்கள் சரியான வாய்ப்புகளை பெறுவதற்கு இது உருவாக்கப்பட்டது . இடஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியா தரப்பட கூடாது.
முழுக்க முழுக்க தவறு
பொருளாதார ரீதியான ஒதுக்கீடு என்பது முழுக்க முழுக்க தவறானது. இது இருக்க கூடிய இடஒதுக்கீட்டை நாசம் செய்துவிடும். இந்த புதிய சட்ட திருத்தம் இந்தியாவில் இருக்கும் சாதி ரீதியிலான இடஒதுக்கீட்டை பெரிய அளவில் பாதிக்க செய்யும். இதனால் சாதியில் பின்தங்கி இருக்கும் மக்கள் பெரிய பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.
என்ன சொல்கிறார்கள்
இந்தியா முழுக்க 49-50 சதவிகித இடஒதுக்கீடு இருக்கிறது. தமிழகத்தில் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு இருக்கிறது. சட்டத்திருத்தம் மூலம் நீதிமன்றம் அனுமதியுடன் இந்த கோட்டா வழங்கப்படும். இதனால்தான் தமிழகம் முன்னேறி உள்ளது. இதனால் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்திற்கு உடனே இடைக்கால தடை விதித்து பின் நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ஒரே கட்சி
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான சட்டம் இது என்று கூறி வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக கட்சி சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சமத்துவத்திற்கான இளைஞர்கள் அமைப்பு (Youth For Equality organisation) சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.