திமுக பொதுக்குழு, மாநில மாநாடு ஒத்திவைப்பு.. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி தொடர்புடைய அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (பிப்.26) டெல்லியில் வெளியிட்டார். இதில், தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், திமுகவின் திருச்சி மாநில மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், மார்ச் 7 அன்று நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
அதேபோல், மார்ச்.14 அன்று திருச்சியில் நடைபெறுவதாக இருந்த திமுக மாநில மாநாடும் ஒத்திவைக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.
ஒரே ஒரு அறிவிப்பு... டாக்டர் ராமதாஸை ஆனந்த கண்ணீரில் நனைய வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
அதேசமயம், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச் செயலாளர் துரைமுருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட திமுக தலைமைக் கழகம் அமைத்துள்ள இந்த குழுவின் தலைவராக பொருளாளர் டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்களாக கே.என்.நேரு, இ.பெரியசாமி, க.பொன்முடி, திருமதி சுப்புலெட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.