திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் கே.பி. ராமலிங்கம் சஸ்பெண்ட்
சென்னை: திமுகவில் இருந்து முன்னாள் மாநிலங்களவை எம்பி கேபி ராமலிங்கத்தை இடை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.பி.ராமலிங்கம், திமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக இருந்த இவர் அண்மையில் திமுகவின் விவசாய அணி செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
முன்னதாக ராமலிங்கம் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பற்ற பிரதமரும் முதல்வரும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார். அத்துடன் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என்று ஸ்டாலின் விடுத்த கோரிக்கை அவசியமற்றது என்றும் கூறியிருந்தார்.
144 தடை என்றால் அரசியல் நடவடிக்கைக்கும் தடை தான் என்றும் எனவே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து தற்போது திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்து கேபி ராமலிங்கம் சஸ்பெண்ட செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கட்சியின் கட்டுபாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர் இடை நீக்கம் செய்யப்படுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.