தமிழக பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிப்போம்.. பழனிமாணிக்கம் எம்.பி
சென்னை: தமிழகத்தின் பிரச்சனைகளை ஓங்கி ஒலித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்போம் என மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு பயணத்துக்கு இடையே அவர் பகிர்ந்துகொண்ட விவரம் பின்வருமாறு;
கேள்வி: மக்களவையில் நீங்கள் உட்பட திமுக எம்.பிக்களின் செயல்பாடு எப்படி இருக்கும்? உங்கள் குரல் எந்தெந்த பிரச்சனைகளை மையமாக வைத்து ஒலிக்கும்?
பதில்: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவது, காவிரி விவகாரம், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இவை தொடர்பாக நான் உட்பட திமுக எம்.பிக்கள் அனைவரும் அவையில் குரலை ஓங்கி ஒலித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து தீர்வு கிடைக்க போராடுவோம்.
கேள்வி: நீங்கள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால், புதிதாக நாடாளுமன்றத்துக்கு வரும் உங்கள் கட்சியை சேர்ந்த எம்.பிக்களுக்கு என்ன யோசனை கூற விரும்புகிறீர்கள்?
பதில்: நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டால் யாரும் யாருக்கும் யோசனை சொல்ல தேவையில்லை. கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பை பயன்படுத்தி சபை நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
கேள்வி: திமுக கூட்டணியில் வெற்றிபெற்ற 37 எம்.பி.க்களால் தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியுமா?
பதில்: தீர்வு காண முடியாது என யார் சொல்வது? அதை சொல்லுங்கள், உங்களுடைய கேள்வியே எதிர்மறையாக உள்ளது. இது போன்ற கேள்விகளுக்கு ஏற்கனவே நிறைய பதில் அளித்துவிட்டேன். ஆகையால் பேட்டியை முடித்துக்கொள்வோம் என்று கூறினார் பழனி மாணிக்கம்.
தமிழகத்திலிருந்து லோக்சபாவுக்கு 37 எம்பிக்கள் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வென்றது நினைவிருக்கலாம்.