திமுக என்ன இந்து கட்சியா.. பிள்ளையாரை காட்டுவாங்களாம்.. மங்கல இசை முழங்குமாம்.. நெட்டிசன்கள் கலாய்!
திமுக நிகழ்ச்சியில் மங்கல இசை முழங்கப்பட்டது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: "பிள்ளையாரை காட்டுவாங்களாம்.. கோயிலுக்கு போவாங்களாம்.. இப்போ மங்கல இசையை முழங்க விடுவாங்களாம், இதை கேட்டால், நாங்கள் பகுத்தறிவுவாதிகள்தான்" என்று பறைசாற்றியும் கொள்வார்களாம்.. இது என்ன மாதிரியான அரசியல்? என்ன திமுக என்ன இந்து கட்சியா?" என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.
இருக்கும் ஒரு பொருளாளர் பதவிக்கும், ஒரு பொதுச்செயலாளர் பதவிக்கும் ஏகப்பட்ட திமுகவின் மூத்த தலைவர்கள் போட்டி போட்டனர்.. ஆனால் இவர்கள் எல்லாருமே சீனியர்கள்தான்.. எல்லாருமே திமுகவின் தூண்கள்தான்.. வருங்காலங்களில் இவர்கள் இல்லாமல் திமுக எந்தவித சாதனையையும் செய்துவிட முடியாது என்பதில் மாற்று கருத்து இல்லை.
அதனால், துரைமுருகன், டிஆர்பாலுவுக்கு அப்பதவிகள் ஒதுக்கப்பட்டதையடுத்து, துணைப் பொதுச்செயலாளர்களாக ஆ. ராசா, பொன்முடியையும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார்.. அவர்கள் அதற்கான விழாதான் இன்று நடந்தது.
அரியர்ஸ் மாணவர்கள் பாஸ்... கபட நாடகம் ஆடி.. மாணவர்கள் எதிர்காலத்துடன் விளையாடக் கூடாது -ஸ்டாலின்
மங்கல இசை
துரைமுருகன், டி.ஆர்.பாலு இருவரது பெயர்களை கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்து அவர்களை வரவேற்கும் போது, அங்கே மங்கல இசை முழங்கப்பட்டுள்ளது. இதுதான் இன்றைய சமாச்சாரமே! இப்படி ஒரு சம்பவம் திமுக வரலாற்றிலேயே இதுவரை கிடையாது.. இது சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. நெட்டிசன்கள் இதை வைத்து விவாதத்தில் இறங்கி விட்டனர்.
கருணாநிதி
ஆரம்ப காலத்தில் இருந்தே, பகுத்தறிவு பிரசாரம் செய்தே கட்சியை வளர்த்தது திமுக... ஆனால், கருணாநிதி இறந்தபிறகு இந்த நிலைப்பாடு சற்று தளர்ந்துள்ளதாகவே கூறப்பட்டது.. அதாவது இந்துக்களுக்கு தாங்கள் எதிரி இல்லை என்பதை காட்டிக் கொள்ளும் பேச்சுகள் அடிக்கடி வெளிவந்தன.
கோயில்கள்
அதற்கேற்றார்போல், துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு போவது நிறைய நடந்தது.. கலைஞர் உயிருடன் இருக்கும்போது, இந்த அளவுக்கு போககாதவர், இப்போது ஏன் கோயில் கோயிலாக சுற்றுகிறார், ஜோசியக்காரரை வீட்டுக்கு வரவழைத்து பேசுகிறார் என்ற கேள்விகளும் எழுந்தன.
பாரம்பரியம்
சொந்த வீட்டில் எப்படி இருந்தாலும், கணவர் வீட்டிற்கு குடிபுகுந்துவிட்டால், அந்த வீட்டு சம்பிரதாயங்கள்தான் ஒவ்வொரு பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே நமது பாரம்பரியம் சொல்கிறது, அப்படி இருக்கும்போது துர்கா கருணாநிதி வீட்டு பழக்கவழக்கம், சம்பிரதாயத்தைதானே கடைப்பிடிக்க வேண்டும்? ஏன் கோயலுக்கு போகிறார் என்ற சந்தேகங்களும் எழுந்தன. ஆனால், "என் மனைவி தெய்வ வழிபாட்டில் நான் குறுக்கே வருவதில்லை, அது அவர் நம்பிக்கை சார்ந்த விஷயம்" என்று ஸ்டாலின் நாசூக்காக ஒதுங்கி கொள்கிறாரே? என்கிறார்கள்.
கனிமொழி
இப்படித்தான் ஒவ்வொரு முறையும் கனிமொழி தேர்தலில் நிற்கும்போது, ராஜாத்தி அம்மாள் கோயிலுக்கு போய் வேண்டி கொள்வார்.. இதை கேட்டால், அது என் அம்மாவின் நம்பிக்கை என்று பதிலளிப்பார்.. இந்த விவகாரத்தில், உதயநிதியும் விலக்கல்ல.. பிள்ளையார் போட்டோவை நடுராத்திரி ட்விட்டரில் போஸ்ட் செய்துவிட்டு, "அது என் அம்மாவுடைய பிள்ளையார்.. அவங்க வாங்கிய சிலையை பார்த்து என் மகள் ஆசைப்பட்டாள்.. அவளுக்காக, அவள் திருப்திக்காக போஸ்ட் செய்தேன்" என்று காரணம் சொன்னார். ஆனால், "இப்படி பிள்ளையாரை காட்டி ஓட்டு வாங்கும் நிலைக்கு ஆளாகிவிட்டதே திமுக" என்றுதான் பேச்சுதான் எடுபட்டது.
மத அரசியல்
இவர்கள் என்னதான் ஒவ்வொரு காரணத்தை சொன்னாலும், அதை பெரும்பாலானோர் ஏற்க தயாராக இல்லை.. இப்படியெல்லாம் வீட்டுக்குள் நடந்து வந்தாலும், பிரசாந்த் கிஷோரை உள்ளே கொண்டு வந்ததில் இருந்தே இந்து மத அரசியல் தலைதூக்குவதாக பலமுறை தகவல்கள் கசிந்தன.. திராவிட சித்தாந்தத்தில் ஊறி போனவர்கள் இதை பார்த்து மிரண்டுதோன் போனார்கள்.. இன்னமும்கூட பல திமுக தலைகள் அதிருப்தியில் உள்ளனர்.. இப்படிப்பட்ட சமயத்தில்தான் இன்று மங்கல இசை முழங்கப்பட்டுள்ளது.
மங்கல இசை
தமிழர் சமூக வழிபாட்டிலும், கோயில் தெய்வ வழிபாடுகளிலும் முழங்கப்படுவதுதான் மங்கல இசை.. மங்கல காரணமான செயற்பாடுகளில் முக்கிய பங்கு பெறுவது.. சமுதாய விழாக்களில் தொடக்க நிகழ்ச்சியாகவும், கோயில் வழிபாடுகளிலும் இவ்விசை விளங்குவதால்தான் இதற்கு மங்கல இசை என்றே பெயர். ஆனால், இதை ஏன் திமுக இன்று காலை செய்தது என்பதுதான் கேள்வியே!
பகுத்தறிவு
ஆக... திமுக இந்து மத கொள்கையை பின்பற்றுகிறதா? அல்லது எத்தனை பிகே வந்தாலும் பகுத்தறிவு பாதையில்தான் தொடர்ந்து பயணம் செய்கிறதா என்பதை இந்த எலக்ஷனுக்குள் தெளிவுப்படுத்த வேண்டும்!