அன்பழகனுக்காக மாற்றப்பட்ட விதி.. திமுகவில் ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரம்.. இதுதான் காரணம்!
சென்னை: திமுகவில் நிர்வாகிகளை சேர்க்கவும், நீக்கவும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரம் தற்போது திமுகவில் தலைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இதில் ஆலோசித்தனர். திமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சில எம்பிக்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சி தேர்தல் குறித்து இதில் ஆலோசனைகளை செய்தனர். அதேபோல் கட்சியில் முக்கிய விதிகளை மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசித்தனர்.
நீள்கிறது தினகரனை விட்டு செல்லும் முக்கிய நிர்வாகிகளின் லிஸ்ட்!.. அதிமுகவில் இணைகிறார் புகழேந்தி
கூடுதல் அதிகாரம்
இந்த நிலையில்தான் தற்போது திமுகவில் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாலினுக்கு திமுகவில் கட்சி நிர்வாகிகளை சேர்க்கவும், நீக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரம் தற்போது திமுகவில் தலைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வேறு என்ன
அதேபோல் திமுகவில் தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் எடுக்கும் முடிவை மாற்றக்கூடிய அதிகாரம் இதுவரை பொதுச்செயலாளருக்கு மட்டுமே இருந்தது. ஆனால் இன்று பொதுக்குழுவில் செய்யப்பட்ட ஆலோசனையில் இந்த அதிகாரம் ஸ்டாலினுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விதியை மாற்ற பல்வேறு காரணங்கள் உள்ளதாக கூறுகிறார்கள்.
இதுதான் காரணம்
தற்போது பொதுச்செயலாளராக இருக்கும் அன்பழகன் உடல் நல குறைவு காரணமாகவும், வயோதிகம் காரணமாகவும் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரால் கட்சி பணிகளை கவனிக்க முடியவில்லை. கட்சி முடிவுகள் அவரின் பெயரில் வெளியானாலும் பெரும்பாலான முடிவுகளை ஸ்டாலினும், பொருளாளர் துரைமுருகனும்தான் எடுக்கிறார்கள்.
அடுத்து யார் வருவார்?
அடுத்த பொதுச்செயலாளர் இப்போது நியமிக்கப்படவில்லை. அதனால் ஸ்டாலினே சுதந்திரமாக முடிவுகளை எடுக்கும் வகையில் அவருக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் கருணாநிதி இருந்தவரை அவர்தான் தலைவராக இருந்தார், அதேபோல்தான் பொதுச்செயலாளர் பதவியிலும் அன்பழகன் இருப்பார். இப்போது புதிய பொதுச்செயலாளர் நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள்.