திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்... பொருளாளர் டி.ஆர்.பாலு... முறைப்படி பொதுக்குழுவில் தேர்வாகினர்
சென்னை: திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலு எம்.பி.யும் பொதுக்குழு மூலம் முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திமுகவின் மூத்த நிர்வாகிகள் என்ற அடிப்படையிலும், அனுபவசாலிகள் என்பதாலும் அவர்கள் இருவரையும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்வு செய்திருக்கின்றனர்.
திமுக தொடங்கப்பட்டு 71 ஆண்டு கால வரலாற்றில் அக்கட்சியின் 4-வது பொதுச்செயலாளராக துரைமுருகன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மகுடம் சூட்டிய திமுக- கொள்கை போராளியாக இணைந்து.. பொதுச்செயலாளராக உயர்ந்த துரைமுருகன்
பொதுச்செயலாளர்
பேராசிரியர் க.அன்பழகன் கடந்த மார்ச் 7-ம் தேதி காலமானதை அடுத்து அவர் வகித்து வந்த திமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்து வந்தது. இதையடுத்து அந்த பதவிக்கு துரைமுருகன் போட்டியிட உள்ளதாகவும் மார்ச் 29-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் பொதுக்குழு நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு கொரோனா விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் மார்ச் 29-ம் தேதி நடைபெற இருந்த பொதுக்குழு ரத்து செய்யப்பட்டது.
காணொலி மூலம்
அப்போது ரத்து செய்யப்பட்ட திமுக பொதுக்குழு 5 மாதங்களுக்கு பிறகு காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைநகரங்களில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் திருமண மண்டபங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகள் அமைக்கப்பட்டு பொதுக்குழு நடத்தப்பட்டது. அதில் திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் முன்மொழியப்பட்டனர். அதை தொடர்ந்து மூத்த நிர்வாகிகள் சிலர் வழிமொழிந்ததை அடுத்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒரு மனதாக அவர்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.
திமுக வரலாறு
திமுக பொதுச்செயலாளராக அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசியர் அன்பழகன் போன்ற தலைவர்கள் அந்தப் பதவியை அலங்கரித்த நிலையில் 4-வது பொதுச்செயலாளராக வந்திருக்கிறார் துரைமுருகன். கட்சியில் புதிதாக இணைப்பது, நீக்குவது உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகள் பொதுச்செயலாளர் வசம் இருப்பது கவனிக்கத்தக்கது. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் திமுகவில் மிகவும் அதிகாரம் படைத்த பதவி இது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர். வகித்த பதவி
இதனிடையே திமுக பொருளாளர் பதவியை பொறுத்தவரை ஒரு காலத்தில் அது எம்.ஜி.ஆர். வகித்த பதவி. அதற்கு பிறகு சாதிக்பாட்ஷா, ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் திமுக பொருளாளர்களாக இருந்திருக்கின்றனர். திமுகவை பொறுத்தவரை வரவும் அதிகம், செலவும் அதிகம் உள்ள கட்சி. இந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ஆர்.பாலு இதற்கு முன் முதன்மைச் செயலாளராக இருந்துள்ளார்.