விவசாயிகளை பற்றி சிந்திக்க அக்.7 வரை அரசுக்கு நேரமில்லை... திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம்
சென்னை: காவிரி டெல்டா பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முழுவீச்சில் திறக்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குறுவை நெல்லைப் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
போர்க்கோலம் பூண்டது டெல்லி ஜந்தர் மந்தர்... உ.பி.யில் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி முழக்கங்கள்..!
குறுவை நெல்
காவிரி டெல்டா பகுதியில் குறுவை நெல் கொள்முதல் செய்வதற்கு நேரடி கொள்முதல் நிலையங்களை இதுவரை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வோர் ஆண்டும் சம்பா நெல் கொள்முதல் செய்வதற்கு டிசம்பர் 16 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரையும், குறுவை நெல் கொள்முதல் செய்வதற்கு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரையும் நெல் கொள்முதல் செய்யும் வகையில் "நேரடி கொள்முதல் நிலையங்கள்" திறக்கப்படும்.
பராமரிப்பு பணி
ஆகவே குறுவை சாகுபடி நெல் கொள்முதல் செய்வதற்கு அக்டோபர் 1-ஆம் தேதி - அதாவது நேற்றைய தினமே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை திறக்கவில்லை. நாளைக்கும் திறக்கப்படுமா என்பது தெரியவில்லை. வழக்கமாக பராமரிப்பிற்காக செப்டம்பர் 28 அல்லது 29-ஆம் தேதிகளில் ஒரு நாள் மூடப்படும் இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் உடனே அக்டோபர் 1-ஆம் தேதி திறக்கப்படும்.
நெல் மூட்டைகள்
ஆனால் இந்த முறை செப்டம்பர் 23-ஆம் தேதி, 25-ஆம் தேதி வாக்கிலேயே மூடப்பட்டு இதுவரை திறக்கவில்லை. கனமழை பெய்து - வயல்கள் வெள்ளக்காடாக மாறி மிதக்கின்ற இந்தச் சூழலில் - அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டிருக்கும் விவசாயிகளின் நெல் மூட்டைகள் பல இடங்களில் முளைத்துப் போய் விட்டன.
உணவு அமைச்சர்
காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சரோ, உணவுத்துறை அமைச்சரோ இது பற்றிக் கண்டுகொள்ளவில்லை. முதலமைச்சரோ வேறு பிரச்சினையில் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்குத் தற்போது விவசாயிகளைப் பற்றிச் சிந்திக்க - அக்டோபர் 7-ஆம் தேதி வரை நேரமில்லை!
வியர்வை சிந்தி
ஒட்டுமொத்தமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அ.தி.மு.க. அரசு நிர்வாகம் இன்றைக்கு விவசாயிகளுக்கு - குறிப்பாகக் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஆபத்தாக இருக்கிறது. கடன் வாங்கி - வியர்வை சிந்த உழைத்து - அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் - பேரிழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நையாண்டி
நேரடிக் கொள்முதல் நிலையங்களை உத்தரவிட அ.தி.மு.க.வின் செயற்குழுவையோ, பொதுக்குழுவையோ - ஏன் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தையோ கூட்டத் தேவையில்லை. அதிகாரிகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பித்தால் போதும் என்பதை உணர்ந்து முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.