"இன்னும் ஒரே ஒரு மாசம் பொறுக்க மாட்டீங்களா.. அதுக்குள்ள ஏன் இவ்ளோ அவசரம்".. துரைமுருகன் காட்டம்!
ஆளுநர் அறிவிப்புக்கு திமுகவின் பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: "புதிய அரசு பல புதிய சிந்தனை திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை மிக தெளிவாக தெரிகிறது. அப்படி இருக்கும்போது, துணை வேந்தர்களின் பெயர்களை ஆளுநர் ஏன் இப்போதே அறிவிக்கிறார்? ஆளுநருக்கு ஏன் இந்த அவசரம்? பொறுத்ததுதான் பொறுத்தீங்க, ஏன் இன்னும் ஒரு மாசம் பொறுத்திருக்க கூடாதா" என்று துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதுதான்:
"தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் 6.4.2021 அன்று தான் நடந்து முடிந்திருக்கிறது. ஆட்சி மன்றத்திற்கான சூழலை இந்த தேர்தல் உருவாக்கிருக்கின்ற நல் தருணம் இது.
புதிய அரசு பல புதிய சிந்தனை திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை மிக தெளிவாக தெரிகிறது. 26.4.2021 அன்று வாக்கு எண்ணிக்கை எண்ணி முடிக்கப்பட்டு இருந்தால், இந்த நேரம், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி பதவி ஏற்றுயிருக்கும்.
ஆளுநர்
ஆனால் ஓட்டு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட இந்த ஒரு மாத காலம் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது தான் மரபு. புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் அதன் நிர்வாகப் பொறுப்பை பல ஆண்டுகளுக்கு ஏற்க போகும் துணை வேந்தர்களின் பெயர்களை ஆளுநர் அவர்கள் அவசர அவசரமாக வெளியிட்டு இருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல.
1. காந்திராம கிராமிய பல்கலைக்கழக துணை வேந்தராக எஸ். மாதேஸ்வரன்
2. கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் செல்வகுமார்
அறிவிப்பு
இவை இரண்டும் ஆளுநர் அறிவித்ததாக செய்தித்தாள்களில் வெளிவந்த அறிவுப்புகள். பல நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த இந்த பதவிகளை புதிய அரசு வந்து நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாகவா பிளந்து விடும். இந்த இரண்டு போதாது என்று """"தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக, கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு அதன் பங்கிற்கு நியமித்து இருக்கிறது.
தேர்தல்
தேர்தல் வருவதற்கு முன்பு இருந்த நடைமுறையில் இருந்த விஷயங்கள்தான் இவைகள். இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது"" என்று ஆயிரம் காரணங்களை ஆளுநர் மாளிகை கூறினாலும், பொறுத்ததுதான் பொறுத்தீர் இன்னும் ஏன் ஒரு மாத காலம் பொறுக்க கூடாது என்பதுதான் எமது கேள்வி.
நியமனம்
முறையான துணை வேந்தர்களை நியமிக்காததால், அகில உலக புகழ் பெற்ற சென்னை பல்கலைக் கழகம் எப்படி சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதை பல்வேறு ஊடகங்கள் எடுத்து காட்டி இருக்கிறது. முடிந்தால் ஆளுநரின் செயலாளர்கள் ஆளுநர் பார்வைக்கு கொண்டு செல்லட்டும். இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல!" என்று தெரிவித்துள்ளார்.