Exclusive: திமுகவில் எ.வ.வேலு தான் "செயல் தலைவர்"... வி.பி.துரைசாமி பரபரப்பு பேட்டி!
சென்னை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடனான சந்திப்புக்கு பிறகு கடந்த மூன்று நாட்களாக அமைதி காத்த திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி இப்போது மவுனம் கலைத்துள்ளார்.
வி.பி.துரைசாமியை மையமாக வைத்து அரசியல் களத்தில் உலா வரும் சர்ச்சைகள் குறித்து அறிவதற்காக அவரை தொடர்புகொண்டோம்.
அப்போது பேசிய அவர், முருகனை சந்தித்தற்கான காரணம் மற்றும் தனது நிலைப்பாடு குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அதன் விவரம் பின்வருமாறு:
கேள்வி: பாஜக தலைவரை திடீரென சந்திக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?
பதில்: பாஜகவில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மாநில தலைவராக வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் முருகன் எனக்கு ஒரு வகையில் உறவினர் அந்த அடிப்படையில் அவரை சந்தித்து வாழ்த்துக்கூறினேன். உறவுக்கு கை கொடுப்போம் என்ற அடிப்படையில் முருகனை சந்திக்க சென்றேன், ஆனால் கொரோனா காரணமாக கை கொடுக்கமுடியவில்லை.
கேள்வி: தலைமைக்கு தகவல் அளிக்காமல் இந்த சந்திப்பை நிகழ்த்தியுள்ளீர்கள், இதற்காக திமுக தலைமை உங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வீர்கள்?
பதில்: என் மீது ஆக்ஷன் எடுக்கப்போவதாக சொல்கிறார்கள். ஆனால் என்ன விவரம் எனத் தெரியவில்லை. திமுக தலைமை என்னிடம் விளக்கம் கோரினால் கட்டாயம் விளக்கம் கொடுப்பேன். அது எனது கடமை. நான் அளிக்கும் விளக்கத்தை ஏற்பதும், ஏற்காததும் தலைமையின் முடிவு. அதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும், கட்சி எடுக்கும் முடிவை கட்டுப்பட்டு ஏற்றுக்கொள்வேன். நான் ஒரு சாதாரண தொண்டன்.
கேள்வி: நீங்கள் சாதாரண தொண்டனா? திமுக தலைவரோடு ஒரே வரிசையில் அமரக்கூடிய முக்கிய இடத்தில் இருக்கிறீர்கள்.. இப்படி கூறலாமா?
பதில்: அதெல்லாம் ஒன்றுமில்லை, கட்சியில் ஆர்.எஸ்.பாரதிக்கு கிடைக்கும் மரியாதை கூட எனக்கு கிடைப்பதில்லை. எ.வ.வேலு திமுகவில் செயல் தலைவராக உலா வருகிறார். தேர்தலின் போது மட்டும் என்னை அழைத்து, அருந்ததியினர் மக்களிடம் பிரச்சாரம் செய் துரைசாமி என வேலு உத்தரவு போடுவார். இன்னும் சொல்லப்போனால் கே.என்.நேருவெல்லாம் எனக்கு ஜூனியர். அவரை கேட்காமல் தலைமை எதுவும் செய்யாது. இப்ப சொல்லுங்க நான் சாதாரண தொண்டனா இல்லையா.
பாஜகவில் இணைகிறாரா வி.பி.துரைசாமி...? சர்ச்சையை ஏற்படுத்திய சந்திப்பு... பின்னணி என்ன?
கேள்வி: உங்களுடைய ஆதங்கத்தை, குறைகளை திமுக தலைவரை சந்தித்து முறையிட்டிருக்கலாமே?
பதில்: அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது சார்.. இதையெல்லாம் நீங்க சொல்வதற்கு நன்றாக இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் தலைவரிடம் தெரிவிக்க முடியாத சூழல் தான் இங்கு உள்ளது. அருந்ததியினர் சமுதாய மக்களை சந்தித்து என்னை வாக்கு கேட்கச் சொல்லும் வேலு, அருந்ததிய பிரிவை சேர்ந்த ஒரு தலைவரை சந்தித்து வாழ்த்துக் கூறியதை ஏதோ தேச விரோத குற்றத்தை போல் பார்க்கிறார்.
கேள்வி: நீங்க பேசுவதை எப்படி எடுத்துக்கொள்ளலாம்..
பதில்: எப்படியும் எடுத்துக்கொள்ள வேண்டாம், நான் பாட்டுக்கு செவனேன்னு இருக்கிறேன். என்னை வடிவேலு ரேஞ்சுக்கு உங்களை போன்றவர்கள் தான் துவை துவைன்னு துவைச்சு எடுக்குறீங்க.. என வழக்கமான தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி பேட்டியை முடித்துக்கொண்டார்.