யாரை பார்த்து திருடன்னு சொல்றீங்க.. அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுக பதிலடி
மின்திருட்டு குற்றச்சாட்டுக்கு ஜெ.அன்பழகன் பதில் அளித்துள்ளார்.
சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு, திருட்டுதனமாக மின்சாரம் எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுக காரசாரமாக பதில் அளித்துள்ளது.
கருணாநிதி சிலை திறப்பு விழா, பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த விழாவின்போது, அங்கிருந்த கட்- அவுட்டுகளுக்கு மின்சாரம் திருட்டுதனமாக எடுக்கப்பட்டதாகவும், கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் பகீர் குற்றச்சாட்டை ஒன்றை சொல்லி இருந்தார்.
அதோடு, ஒரு வீடியோ ஒன்றையும் ஆதாரமாக வெளியிட்டு அவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஜெனரேட்டர்
அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு திமுக சார்பில் தற்போது பதிலளிக்கப்பட்டுள்ளது. சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் இது சம்பந்தமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அவர் சொல்லி இருப்பதாவது: "பொதுக்கூட்டத்திற்கான மின்சாரம் முழுவதும் ஜெனரேட்டர் மூலமே எடுக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரியும்.
பொறுக்க முடியவில்லை
சிலை திறப்பு விழா மாபெரும் வெற்றி பெற்றதால் பொதுமக்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு பன்மடங்காக அதிகரித்து வருவதால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத அமைச்சர் ஜெயக்குமார் விழாவுக்கு களங்கம் ஏற்படுத்த பத்திரிகையாளரிடம் மின் திருட்டு என வாட்ஸ்அப்பில் வந்த தகவலை செய்தியாக காண்பித்து குற்றம் சுமத்துகிறார்.
|
தரம் தாழ்ந்தவர்களா?
வாட்ஸ்அப்பில் வந்ததை எல்லாம் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசினால் அமைச்சர் மீதும் எவ்வளவோ குற்றம் சாட்டலாம். ஆனால் தி.மு.க.வினர் என்றைக்கும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.
நடுங்கி போய் உள்ளது
அமைச்சரின் பேச்சில் என்ன தெரியவருகிறது என்றால் கருணாநிதி சிலை திறப்பு விழாவை பார்த்து ஆளுங்கட்சி ஆட்டம் கண்டு அஞ்சி நடுங்கி போய் இருப்பது தெரிகிறது" என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.