சென்னையில் இலவசமாக தண்ணீர் வழங்கும் திமுக.. புதுக்குடத்தில் தண்ணீர் பிடிச்சுக் கொடுத்த தயாநிதிமாறன்
Recommended Video
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி, கட்டணமில்லாமல் குடி தண்ணீர் வழங்கும் முயற்சியில் திமுகவினர் சென்னை முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள். துறைமுகம் பகுதியில் தயாநிதி மாறன் எம்பி மற்றும் பிகே சேகர் பாபு தலைமையிலான திமுகவினர் தண்ணீர் லாரியை வரவழைத்து பொதுமக்களுக்கு விநியோகித்தனர். தயாநிதிமாறன் சேர் போட்டு அமர்ந்து பொதுமக்களுக்கு தண்ணீரை பிடித்துக்கொடுத்தார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டுபோய்விட்டதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இப்போது வீராணம் ஏரியில் இருந்து மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதுதவிர போரூர் ஏரி மற்றும் கல்வாரி நீரை சுத்தம் செய்து தண்ணீரை பொதுமக்களுக்கு அரசு விநியோகித்து வருகிறது.
இதுதவிர திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தண்ணீர் நிறைந்த காணப்படும் விவசாய கிணறுகளை தேடி கண்டுபிடிக்கும் அரசு அவற்றில் இருந்து தண்ணீரை பிடித்து லாரிகளில் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறது.
மக்களுக்கு குடிநீர் இல்லை
ஆனால் சென்னையின் குடிநீர் தேவைக்கு யானை பொறிக்கு சோளப்பொறி என்ற ரீதியில்தான் தண்ணீர் சென்னைவாசிகளுக்கு கிடைக்கிறது. இதனால் மக்கள் தண்ணீருக்காக அலைமோதி வருகிறார்கள்.
ஸ்டாலின் உத்தரவு
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் உத்தரவின்படி, கட்டணமில்லாமல் குடி தண்ணீர் வழங்கும் முயற்சியில் திமுகவினர் சென்னை முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள்.
திமுக இலவச குடிநீர்
இதன்ஒரு பகுதியாக சென்னைக் கிழக்கு மாவட்டம், துறைமுகம் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டணமில்லா குடிநீர் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் தண்ணீருடன் இலவசமாய் குடங்களையும் திமுகவினர் வழங்கினர். மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன் தண்ணீர் லாரிக்கு அருகில் சேர் போட்டு அமர்ந்து கொண்டு, பொதுமக்களுக்கு புதிய குடத்தில் தண்ணீர் பிடித்து வழங்கினார்.
பி கே சேகர்பாபு ஏற்பாடு
இதற்கான ஏற்பாடுகளை சென்னைக் கிழக்கு மாவட்ட திமுக கழகச் செயலாளர் பி கே சேகர்பாபு, எம்.எல்.ஏ., பகுதி திமுக கழகச் செயலாளர்கள் எஸ். ராஜசேகர் மற்றும் எஸ்.முரளி, மற்றும் துறைமுகம் பகுதி திமுக கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கண்டுகொள்ளதாக
திமுகவினர் இலவச குடிநீர் வழங்கி பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ள நிலையில், அதிமுகவினர் இதை பற்றி சுத்தமாக கண்டுகொள்ளாமல் அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை மட்டும் மக்களிடம் சொல்லி வருகிறார்ககள். இதனால் தண்ணீர் பிரச்னையில் திமுக மக்களிடம் நல்லபிள்ளையாகவும், அதிமுக கெட்டப்பெயரையும் பெற்று வருகிறது. இதனை அதிமுகவினர் தடுக்கத்தான் நடவடிக்கை எடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது.