இளைஞரணி செயலாளர் பொறுப்பு பறிப்பு.. வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு புதிய பொறுப்பு!
சென்னை: இளைஞரணி செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டது.
திமுகவின் அதிகாரமிக்க பொறுப்புகளில் ஒன்று திமுக இளைஞரணி செயலாளர் பதவியாகும். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு ஏதேனும் பொறுப்பு வழங்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அவருக்கு 30 ஆண்டுகளாக அவரது தந்தை வகித்து வந்த இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து இன்றைய தினம் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் அவர் கூறுகையில் திமுக இளைஞர் அணிச் செயலாளராக பணியாற்றி வரும் வெள்ளக்கோவில் சாமிநாதன் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக கழக சட்டத்திட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி, இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
உதயமானது இன்னொரு "இளம் சூரியன்".. திமுக இளைஞர் அணி இனி உதயநிதி ஸ்டாலின் வசம்!
இதை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். மூத்த தலைவர்களும் இந்த நியமனத்தை வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வேறு ஒரு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக புதிய பொறுப்பு வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.