திருச்செங்கோடு கவுன்சிலரான முதல் திருநங்கை ரியா.. ராசிபுரத்தில் போட்டியிட சீட் கொடுக்குமா திமுக?
சென்னை: ராசிபுரம் தொகுதிக்கான திமுக வேட்பாளர் நேர்காணலில் திருநங்கை ரியா கலந்து கொண்டார். இவர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை கவுன்சிலரானார்.
தமிழகத்தில் காலியாக இருந்த ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக கடந்த 2019ஆம் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி பெற்றார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திருநங்கை ரியா என்பவர் போட்டியிட்டார். அவர் 950 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
சட்டசபைத் தொகுதி
இவர் தற்போது ராசிபுரம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து அவர் நேர்காணலையும் முடித்துக் கொண்டுள்ளார். இவருக்கு சீட் ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வார்டு ஒன்றிய கவுன்சிலராக உள்ள ரியா தனது பணிகளை செவ்வனே செய்து வருகிறார்.
மக்கள் விருப்பம்
அது போல் அவர் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றால் நிச்சயம் அத்தொகுதி பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்கள் விரும்புகிறார்கள். இவருக்கு ஆதரவுக் குரல்கள் இணையதளத்திலும் ஒலிக்கின்றன. உள்ளாட்சி தேர்தலில் இவரது வெற்றியாலும் ஜெயித்த பிறகு இவர் செய்யும் நலத்திட்டங்களாலும் ஸ்டாலின் மகிழ்ச்சியாக உள்ளாராம்.
கொளத்தூர் தொகுதி
அது போல் அதிமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் அப்சரா ரெட்டி போட்டியிடுகிறார். ஸ்டாலினை எப்படியும் தோற்கடிப்பேன் என்கிறார். மருத்துவம், காவல் துறை, அரசு துறை, தனியார் துறை, தன்னார்வலர் உள்ளிட்ட துறைகளில் திருநங்கைகள் பட்டையை கிளப்பி வருகிறார்கள்.
வார்டு கவுன்சிலர்
அது போல் திருநங்கைகள் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களது குறைகளை மட்டுமல்லாமல் மக்கள் குறைகளையும் தீர்க்க வேண்டும். வார்டு கவுன்சிலராக கலக்கி வரும் ரியாவுக்கு வாய்ப்பு கொடுத்தால் ராசிபுரம் தொகுதியிலும் கலக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.