கூட்டணி கட்சிகள் எதற்கு.. 234 தொகுதிகளிலும் திமுக தனித்தே போட்டி.. ஒரே போடாக, போட்ட பிரசாந்த் கிஷோர்
சென்னை: இப்படியே போனால் வேலைக்காகாது.. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது, கூட்டணி கட்சிகள் அத்தனையையும் கழட்டி விட்டுவிட்டு, திமுக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டால் கூட வெற்றி நமதே.. என்று ஒரே போடாகப் போட்டு உள்ளார் அந்தக் கட்சியின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர்.
பிரசாந்த் கிஷோர், முதல் பந்திலேயே இப்படி ஒரு சிக்சரை விளாசி, திமுக கூட்டணி கட்சியினருக்கு ஜெர்க் கொடுத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அரசியல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் திமுக சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது. "2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக இந்த டீம் தங்களுடன் இணைந்து பணியாற்றும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
பிரசாந்த் கிஷோர் அபாரம்
இன்னும் ஒரு வருட காலம் இருந்த போதிலும் கூட, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இப்போதே ஆரம்பித்து விட்டார் பிரசாந்த் கிஷோர். திமுகவின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை என்ன? என்பதை எல்லாம் ஏற்கனவே தனது டீம் மூலமாக முழுக்க முழுக்க சேகரித்து, பக்காவாக ஒரு பைல் போட்டு வைத்திருந்தாராம் பிரசாந்த் கிஷோர். இந்த நிலையில்தான் சமீபத்தில் ஸ்டாலின் மற்றும் பிரசாந்த் கிஷோர் ஆகிய இருவரும் முதல் கட்ட ஆலோசனை நடத்தி முடித்து உள்ளனர் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.
திமுக அலை
இந்த ஆலோசனையின் போது, தமிழகம் முழுக்க தற்போது திமுகவுக்கு ஆதரவான அலை வீசுவதாக ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் சொல்லியுள்ளார். மேலும், திமுக தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டால் கூட ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் வெற்றி பெற முடியும் என்றும் ஆணித்தரமாக அப்போது தெரிவித்துள்ளாராம். இந்த தகவல் தெரிந்து, திமுக கூட்டணி கட்சியினர் ஆடிப்போய் இருக்கிறார்கள் என்கிறது அரசியல் வட்டாரம்.
கடந்த தேர்தல்
2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரசுக்கு அதிக இடங்களை வாரிக் கொடுத்தது திமுக. அந்த கட்சி போட்டியிட்ட பெரும்பான்மையான தொகுதிகளில் தோல்வியடைந்தது. இது திமுக கூட்டணி பெரும்பான்மைக்கு, பக்கத்தில் வந்தும் அதிமுகவிடம் மீண்டும் ஆட்சியைப் பறி கொடுக்க காரணமாக அமைந்தது. ஒரு வேளை, திமுகவே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு இருந்தால் நிலைமை வேறுமாதிரி மாறி இருக்கும் என்ற பேச்சு அப்போதே எழுந்தது. அதேநேரம் எதிர்க்கட்சிகளின் ஓட்டுக்கள் சிதறுவது என்பது ஆளும் கட்சிக்கு ஆதரவாக போய்விடும் என்பது அரசியலின் பாலபாடம். இந்த விஷயத்திற்காகதான், திமுக தனது கூட்டணி கட்சிகளை அரவணைத்து சென்று கொண்டு இருக்கிறது.
குழப்பம்
கடந்த முறை, தேமுதிகவின் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் போன்றவை மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணி அமைத்தன. அந்த கூட்டணி எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாவிட்டாலும் கூட ஓட்டுகளை சிதறடித்து அதிமுக பழையபடி அரியணையில் அமருவதற்கு ஒருவகையில் மறைமுகக் காரணமாக மாறியது. அந்த அதிர்ச்சியிலிருந்து திமுக இன்னும் மீளவே இல்லை. அப்படி இருக்கும்போது, கூட்டணி கட்சிகளை கழட்டிவிட்டு அடுத்த 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக போட்டியிடுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பயப்பட வேண்டாம்
இதுதொடர்பாக திமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், பிரசாந்த் கிஷோர் நடப்பு நிலவரத்தைத்தான் ஸ்டாலினுக்கு எடுத்துக்கூறினார். மற்றபடி கூட்டணி கட்சிகளை கழட்டி விட்டு தனியே போட்டியிட வேண்டும் என்று அவர் வற்புறுத்தவில்லை. திமுகவுக்கும் அந்த எண்ணம் கிடையாது என்று தெரிவித்தார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியும், இதுபோன்ற செய்திகள் திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதற்காக கிளப்பி விடப்படுகின்றன.. கூட்டணி கட்சிகளை கழற்றி விடும் எண்ணம் இல்லவே இல்லை, என்று கூறியுள்ளார் திட்டவட்டமாக.
சாத்தியமா?
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக பெற்ற வாக்கு வங்கி, 31.6 சதவீதம். இந்த வாக்கு வங்கி ஒருவேளை ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது. ஏனெனில், இந்த தேர்தலில், அமமுக, ம.நீ.ம மற்றும் ரஜினி கட்சி போன்றவை புதிதாக களம் காணும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஓட்டு பிரிந்து, எல்லா கட்சிகளுக்குமே வாக்கு வங்கி குறையத்தான் செய்யும். இதை கருத்தில் கொண்டு பார்த்தால், திமுக தனித்து போட்டியிடும் முடிவுக்கு போகாது என்று பெரும்பாலான அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.