சானிட்டரி நாப்கின் டூ கொரோனா கால சாப்பாடு வரை முறைகேடு புகார்- எப்ப சிக்குவார் மாஜி சி.விஜயபாஸ்கர்?
சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் சானிட்டரி நாப்கின் முதல் கொரோனா கால முன்களப் பணியாளர்களுக்கான உணவு வழங்கியது வரை ஏராளமான முறைகேடு புகாருக்குள்ளான சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது எப்போது நடவடிக்கை பாயும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா லஞ்ச புகார் நாடறிந்த ஒன்றுதான். குட்கா லஞ்சம் தொடர்பாக ரெய்டு நடத்தப் போன இடத்தில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா பட்டியல் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனாலேயே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. குட்கா லஞ்ச முறைகேடு வழக்கில் வசமாக சிக்கிய விஜயபாஸ்கர் அடுத்தடுத்து ஏராளமான புகார்கள் குவிந்து கொண்டே வருகின்றன. தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமும் விஜயபாஸ்கர் மீதான கொரோனா கால ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார்.
ஆட்டம் ஆரம்பம்.. இந்தியரை துப்பாக்கி முனையில் கடத்திய தாலிபான்கள்.. காபூலில் அட்டகாசம்.. பரபரப்பு
விஜயபாஸ்கர் மீதான புகார்கள்
விஜயபாஸ்கர் மீதான புகார்களில் மிக முக்கியமானவை சானிட்டரி நாப்கின் கொள்முதல், அம்மா ஊட்டச்சத்து பெட்டக டெண்டர் முறைகேடு, கொரோனா முன்களப் பணியாளர்களுக்கான உணவு வழங்குதலில் மோசடி ஆகியவை முக்கியமானவை என்கின்றனர் அதிகாரிகள். அதிமுக ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்குவது தொடர்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சானிட்டரி நாப்கின் மோசடி
அதேநேரத்தில் கடந்த 8.12.2017-ல் சானிடரி நாப்கின் ரூ.11.82 கோடிக்கு கொள்முதல் செய்து வழங்கப்பட்டது; 24.03.2020-ல் சானிடரி நாப்கின் ரூ.44.15கோடி செலவில் வழங்கப்படும் என்கின்றன அரசு கோப்புகள். 14,91,974 மாணவிகளுக்கும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 73,51,628 பெண்களுக்கும் ரூ.44.15 கோடியில் சானிடரி நாப்கின் வழங்கப்பட்டதாகவும் அந்த கோப்புகள் சொல்கின்றன. ஆனால் இவற்றை வழங்காமலேயே போலி பில் போட்டு ரூ44.15 கோடி முறைகேடு அதிகாரிகள் உடந்தையுடன் அரங்கேறியது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் அதிகாரிகள்.
ஊட்டச்சத்து பெட்டக டெண்டர்
அதேபோல் அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்துக்கு டெண்டர் விட்டது அதிமுக அரசு. ஊட்டச்சத்து பெட்டகத்தில் ஆவின் நெய் அரை லிட்டர், ஒரு பிளாஸ்டிக் கப், காட்டன் டவல், 200 மில்லி அளவிலான இரும்புச்சத்து டானிக் 3 பாட்டில் என பல பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த பெட்டகம் ஆண்டுக்கு ரூ250 கோடி அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டன. அப்படி கொள்முதல் செய்த நிறுவனங்கள் அத்தனையும் பினாமி நிறுவனங்கள் என்பது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் அம்பலமாகி இருக்கிறதாம்.
முன்கள பணியாளர் உணவு
அடுத்ததாக கொரோனா முன்களப் பணியாளர்களுக்கான உணவு வழங்குதலில் நடந்ந்த மோசடி.. இந்த மோசடி தொடர்பாக தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், கொரோனா பேரிடர் காலங்களில் மருத்துவ பணியாளர்களுக்கான உணவு மற்றும் தங்கும் விடுதிகளில் முறைகேடு என ஆய்வு மேற்கொண்டதில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு நபரின் ஒரு நாள் உணவு செலவு 550 முதல் 600 ரூபாயாக இருந்தது. தற்போது இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது உணவகமே வைத்திருக்காதவர்கள் வெளி இடத்தில் உணவை வாங்கி முறைகேடாக பணம் பெற்று வந்தது தெரிய வந்துள்ளது. தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறந்த உணவகங்களில் அரசே நேரடியாக பேசியதன் விளைவாக திமுக ஆட்சியில் ஒரு நபரின் உணவின் விலை தற்போது 350-450 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த அரசை காட்டிலும் நாள் ஒன்றிற்கு 30 லட்சம் ரூபாய் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவிலிருந்து சேமிக்கப்படுகிறது என்றார். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம். அத்துடன் கொரோன முக கவசம் உள்ளிட்டவை வாங்கியதிலும் ஏகப்பட்ட முறைகேடுகளாம். ஆக எப்ப சிக்குவாரோ விராலிமலை விஜயபாஸ்கர்? என்கின்றனர் அதிகாரிகள்.