பிரஷாந்த் கிஷோர் விவகாரத்தில் பரிதவிக்கும் அதிமுக.... நமட்டு சிரிப்புடன் வேடிக்கை பார்க்கும் திமுக!
Recommended Video
சென்னை: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை பயன்படுத்தலாமா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் அதிமுக பரிதவிப்பதைக் கண்டு திமுக நமட்டுச் சிரிப்புடன் பார்த்து வருகிறதாம்.
பிரதமர் மோடி முதல் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரையில் அவர்களது தேர்தல் வெற்றிகளில் பிரசாந்த் கிஷோரின் வியூகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் கிஷோரின் பரிந்துரைகளை காங்கிரஸ் ஏற்காததால் தோல்வி அடைந்தது.
தற்போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்நிலையில் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் பிரசாந்த் கிஷோரை அணுக திட்டமிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஓபிஎஸ் ஏன் எதிர்ப்பு?
அதேவேகத்தில் பிரசாந்த் கிஷோருக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டதும் தெரியவந்தது. ஒபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரையில், ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் மிக நெருக்கமாக இருப்பவர் பிரசாந்த் கிஷோர். அதனால் அதிமுகவின் வியூகங்கள் திமுகவுக்கு சென்றுவிடும் என நினைக்கிறார்.
வெல்ல வேண்டுமே...
ஆனால் முதல்வர் எடப்பாடி தரப்போ, அப்படி எல்லாம் நடந்துவிடாது; நமது வலிமையை காட்ட வேண்டிய தருணம்தான் வரும் தேர்தல் என்பதால் பிரசாந்த் கிஷோரின் உதவி தேவை என கருதுகிறதாம். இதில் கொங்கு அமைச்சர்களும் உறுதியாக உள்ளனராம்.
திமுகவின் நமட்டு சிர்ப்பு
இப்படி ஒரு ஊசலாட்டமான நிலையில் அதிமுக பரிதவிப்பதை கண்டு திமுக நமட்டு சிரிப்பு சிரிக்கிறதாம். ஏனெனில் பிரசாந்த் கிஷோரின் வியூகம் என்னவாக இருக்கும் என்பதை தங்களால் யூகிக்க முடியும். அதனால் அவர் எப்படி திட்டமிடுவார்? அதற்கு என்ன மாதிரியான பதில் தருவது? என்பதெல்லாம் தங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்கிறது திமுக தரப்பு.
திமுகவின் நம்பிக்கை
பிற மாநிலங்களில் பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள் பிற கட்சிகளுக்கு தெரியாமல் போவதால் அவரது நடவடிக்கைகள் ஒர்க் அவுட் ஆகும். இங்கே அந்த முயற்சி பலிக்காது என திடமாக நம்புகிறது திமுக தரப்பு. பிரசாந்த் கிஷோர், அடிமட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தி ஆட்சியை கைப்பற்றும் வியூகத்தைச் செயல்படுத்துவார்... அதை திமுக தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் அக்கட்சி மூத்த நிர்வாகிகள்.