காங்கிரஸை கழற்றிவிடும் திமுகவின் முடிவுக்கு காரணம் என்ன? "காங்.பிரமுகர்" பேச்சால் ஏற்பட்ட அதிருப்தி?
சென்னை: காங்கிரஸ் கட்சி மீது திமுக அதிருப்தியில் உள்ளதற்கு காரணம் திருச்சி எம்பி திருநாவுக்கரசர்தான் என கூறப்படுகிறது. இதை கராத்தே தியாகராஜனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தமிழக அரசு தீர்க்க தவறியது குறித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் கே என் நேரு பேசுகையில், காங்கிரஸுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது? உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என கலகக் குரல் கொடுத்துள்ளார்.
கொளுத்தி போட்ட உதயநிதி
இது திமுகவினரையும் காங்கிரஸ் கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே நேற்று அரசியலுக்கு வந்த ஸ்டாலின் மகன் உதயநிதி, கூட்டணி கட்சியினருக்கு குறைந்த அளவிலான இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற ஒரு விஷயத்தை கொளுத்தி போட்டதே இன்னும் அணையாமல் உள்ளது.
காரணம்
இந்த நிலையில் கே என் நேரு பேசியது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சிக்குள்ளாகியது. ஸ்டாலினின் அனுமதியின்றி இது போல் அவர் பேச வாய்ப்பில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் எண்ணமாகும். இந்த நிலையில் காங்கிரஸ் மீது கொண்ட அதிருப்தி காரணமாகவே இவர் இதுபோல் பேசியுள்ளதாக தெரிகிறது.
செல்வாக்கால் வெற்றி
திருச்சி எம்பியாக திமுகவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ் திருநாவுக்கரசர், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு புதுக்கோட்டையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில் எனக்கு இருக்கும் செல்வாக்கால் வெற்றி பெற்றுள்ளேன் என கூறியிருந்தார்.
செல்வாக்கு
இது திமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் கராத்தே தியாகராஜன் தமிழ் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் திருச்சி எம்பியாக பதவியேற்றதற்கு தனது செல்வாக்குதான் காரணம் என திருநாவுக்கரசர் கூறியிருந்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
திருநாவுக்கரசர் பேச்சு
அதன் வெளிப்பாடாகவே கே என் நேரு, இன்னும் எத்தனை காலம்தான் காங்கிரஸுக்கு திமுக பல்லக்கு தூக்குவது என பேசினார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். திமுக- காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் பேச்சுதான் காரணம் என கூறப்படுகிறது.