ரஜினி, சசிகலா அறிக்கையால் டபுள் பலம் பெற்ற திமுக.. விஸ்வரூபம் எடுக்கும் கமலால் அப்செட்!
சென்னை: ரஜினி, சசிகலா ஆகியோரை அரசியலுக்கு வராமல் உள்ளதன் மூலம் திமுகவுக்கு டபுள் பலம் கிடைத்துள்ளது. எனினும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எடுக்கும் விஸ்வரூபத்தால் திமுக அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக, திமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் அதிமுக, திமுகவே பிரதான கட்சிகளாக உள்ளன. இவை மற்ற கட்சிகளை கூட்டணியில் இணைத்து கொள்கின்றன. இதனால் போட்டி என பார்த்தால் அதிமுக, திமுகவுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் தேமுதிக உதயமானவுடன் அதன் செல்வாக்கும் வாக்குச் சதவீதமும் கணிசமான அளவில் இருந்ததால் விஜயகாந்தின் அசுர வளர்ச்சியை நினைத்து ஜெயலலிதாவும் கருணாநிதியுமே ஆச்சரியப்பட்டனர்.
இதையடுத்து தேமுதிகவின் செல்வாக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சரிய தொடங்கியது. இதனால் தொடக்கத்தில் தனித்து போட்டியிட்ட அக்கட்சி ,தற்போது கூட்டணிக்காக ஏதேதோ ஸ்டன்டுகளை அடித்து வருகிறது. தேசிய கட்சியான பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைத்த நேரத்தில் அக்கட்சி அதிமுகவுடன் கூட்டணிக்கு சென்றுவிட்டதால் பிரச்சினை ஒன்றும் இல்லை.
திமுக
இதனால் போட்டி என பார்த்தால் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டுமே இருந்தது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக உள்ளிட்ட தொடங்கப்பட்டதால் இரு பெரும் கட்சிகளும் கலக்கம் அடைந்தன. கலக்கம் என்றால் அக்கட்சிகளிடம் தோற்றுவிடுவோம் என்பதில்லை. அக்கட்சியினரால் வாக்கு சிதறினால் நூலிழையில் வெற்றி வாய்ப்புகளை இழக்கக் கூடும் என்ற கலக்கம்தான் இரு கட்சிகளையும் ஆட்டிப் படைத்தன.
அதிமுக
இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்றவுடன் அதிமுகவை காட்டிலும் திமுகவுக்கே அதிக தோல்வி பயம் இருந்ததாக சொல்லப்படுகிறது. அண்ணாத்த செட்டில் கொரோனா, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றால் "அச்சமடைந்த" ரஜினிகாந்த் தானாகவே அரசியலுக்கு வராமலேயே வர இயலாது என அறிவித்ததால் திமுக நிம்மதி பெருமூச்சுவிட்டதாம்.
சசிகலா
அடுத்து ஜெயலலிதாவுடன் 34 ஆண்டுகாலம் பயணித்த சசிகலா விடுதலை திமுகவை மிகவும் பாதித்ததாம். ஜெயலலிதாவுக்கு கடினமான நேரங்களில் ஆலோசனை தந்தவர் சசிகலா என்பதால் அவரது வருகையை எண்ணி திமுக கவலைப்பட்டதாகவே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்ற அறிவிப்பால் அறிவாலய வட்டாரங்கள் கடும் மகிழ்ச்சியில் உள்ளதாம்.
அமமுக
அடுத்து களத்தில் இருப்பது நாம் தமிழர் கட்சியும், அமமுக, மக்கள் நீதி மய்யமும்தான்... நாம் தமிழர் கட்சியை கடந்த ஆர் கே நகர் இடைத்தேர்தல் முதல் பார்த்து வரும் திமுகவுக்கு அதன் பலம் ஓரளவு தெரிந்து விட்டது. சசிகலா வந்த தைரியத்தில் அரசியல் செய்ய நினைத்த தினகரனின் அமமுக குறித்து திமுகவுக்கு கவலையில்லை. சசிகலா போல் அவரும் தானாக ஆஃப் செய்யப்படுவார் என திமுக மலை போல் நம்புகிறதாம். எல்லாம் சரியாக இருக்க ஒரே ஒரு விஷயத்தால் மட்டும் திமுக அப்செட் ஆனதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் விஸ்வரூபம்தான் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக வாக்குகளை பிரிக்கும் என சொல்லப்படுகிறது. இன்று முதல் கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தை வேறு மீண்டும் தொடங்கியுள்ளார். இதனால் இனி அவர் அடியெடுத்து வைக்கும் தொகுதிகளில் மத்திய மாநில அரசின் திட்டங்களை விமர்சித்து பேசுவார் என்றே தெரிகிறது. நாளுக்கு நாள் கமலின் செல்வாக்கு உயர்ந்து கொண்டே வருவதால் கவலையில் அறிவாலயத்தினர் இருக்கிறார்களாம்.