சீனுக்கு வந்ததே லேட்.. இனியும் இப்படி செய்தால் நியாயமா? திமுகவின் செயலால் தொண்டர்கள் ஷாக்!
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பெரிய அளவில் கவனம் செலுத்தாமல் இருப்பது கட்சியின் தொண்டர்களை, முக்கியமான உறுப்பினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சென்னை: உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பெரிய அளவில் கவனம் செலுத்தாமல் இருப்பது கட்சியின் தொண்டர்களை, முக்கியமான உறுப்பினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதே சமயம் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வேறு தேதிகளில் நடக்கும்.
உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு அளித்தது. ஆனால் திமுகவின் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தயார்
இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக மிகவும் தாமதமாகத்தான் தயார் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக மூன்று வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தது. இதில் மூன்று வழக்கிலும் திமுகவின் கோரிக்கைக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திட்டம் இல்லை
ஊரக உள்ளாட்சி தேர்தலை மட்டும் தனியாக நடத்தினால் அது அதிமுகவிற்கு சாதகமாக மாறும் என்று திமுக தொடர்ந்து இந்த தேர்தலை எப்படியாவது தள்ளிப்போட முயன்றது. ஆனால் திமுக திட்டம் எதுவும் நிறைவேறவில்லை. தற்போது தமிழக தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுக இன்னொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது.
இன்னொரு வழக்கு
ஆனால் இந்த வழக்கால் உள்ளாட்சி தேர்தல் நிற்க வாய்ப்பில்லை. குறிக்கப்பட்ட தேதிகளில் கண்டிப்பாக தேர்தல் நடக்கும். இந்த உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுக மிக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னும் பிரச்சாரத்தை அதிமுக தலைவர்கள் செய்யவில்லை என்றாலும், கீழ்மட்ட அளவில் உள்ள உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அதிமுக கூட்டணி
வீதி வீதியாக சென்று அதிமுக உறுப்பினர்கள் பலர் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக கூட்டணி கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் திமுக இன்னும் தீவிரமாக பிரச்சாரம் எதையும் செய்யவில்லை. உள்ளாட்சி தேர்தல் எப்படியாவது தடைபடும் என்று திமுக தீவிரமாக நம்பியது. ஆனால் திமுகவின் நம்பிக்கை வீணானதுதான் மிச்சம். கடைசி வரை அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
என்ன தாமதம்
இதனால் பிரச்சாரத்தை தொடங்காமல் திமுகவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால் இப்போதும் கூட திமுகவின் தலைமை உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தவில்லை . தற்போது தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுக புதிய வழக்கு தொடுத்து இருக்கிறது. இதுதான் தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக தயார் ஆனதே கடைசி நிமிடத்தில் தான். ஆனால் இப்போதும் கூட திமுக தேர்தல் மீது கவனம் செலுத்தவில்லை.
எத்தனை நாட்கள்
கடைசி நேரத்தில் புதிய வழக்குகளை தாக்கல் செய்து வருகிறார்கள். இது தேவையில்லாதது. கிராமப்புற திமுகவினருக்கு கையில் செலவு செய்ய பணம் இல்லை. முறையாக நிதி செல்லவில்லை என்று புகார் மேல் புகாரை அடுக்கி உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரத்தில் திமுக பெரிய அளவில் கவனம் செலுத்தாமல் இருப்பது கட்சியின் தொண்டர்களை, முக்கியமான உறுப்பினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.