அதிமுக போட்ட அசத்தல் மாஸ்டர் பிளான்.. கோட்டை விட்ட திமுக.. இனி ஒவ்வொரு அடியும் ரொம்ப முக்கியம்
திமுகவின் தோல்விக்கு என்ன காரணங்கள் என்பதை ஆராய வேண்டி உள்ளது
Recommended Video
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு என்ன காரணம் என்ற ஆய்வுகள் கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளன. கட்சி வைத்த அதீத நம்பிக்கைதான் அதற்கு எதிராகப் போயுள்ளதாக ஒரு கருத்து வலுத்து வருகிறது.
வழக்கமான இடைத்தேர்தலை போல அதிமுக, திமுக இரு தரப்புமே எடுத்து கொள்ளவில்லை.. இருவருமே நீயா, நானா என்றுதான் களம் இறங்கினார்கள். ஆனால் அதிமுக போட்ட மாஸ்டர் பிளானை திமுக போட தவறிவிட்டது என்பது உண்மை.
முதல்வர் பதவியும் கிடையாது.. 50/50 ஒப்பந்தமும் கிடையாது.. சிவசேனாவிற்கு டிமிக்கி கொடுக்கும் பாஜக!
இவ்வளவு நாள் திமுக பிரச்சாரம் செய்தும் அப்படி என்னதான் அங்கு நடந்தது.. எங்கு தவறு நடந்தது.. எங்கு திமுக சறுக்கி விட்டது என்ற கேள்விகளுக்கு கிடைத்த விடைகள்தான் இவை:
விசிக
முதலாவதாக, கூட்டணி தலைவர்களின் ஒத்துழைப்பு முழுமையாக இல்லை. கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படாமல் போனதும், கட்சி தலைமை கூட்டணி தலைவர்களை சரிவர பயன்படுத்தி கொள்ளாமல் போனதுமே மிகப்பெரிய தவறாக பாரக்கப்படுகிறது. அதிலும் விசிகவை ஒதுக்கியது அப்பட்டமாகவே வெளிப்பட்டது அக்கட்சி தொண்டர்களை காயப்படுத்தியே உள்ளது.
வன்னியர் சமுதாயம்
இரண்டாவதாக, வன்னியர் சமுதாயத்தின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்று பேசியதே, ஸ்டாலினுக்கு எதிராக போய்விட்டது. உள்ஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற ஓட்டுக்காக தரப்படும் வாக்குறுதியே ஏற்கனவே இருந்த நம்பகத்தன்மையை கீழே போட்டு உடைத்துவிட்டது. இதனால் இவர்களுக்கு மட்டும் உள் ஒதுக்கீடு என்றால், மற்ற சாதிக்காரர்களுக்கு கிடையாதா என்ற கேள்வியை கிளப்பி விட்டுவிட்டது.
நம்பகத்தன்மை
வன்னியர் சமுதாய பேச்சினை ஸ்டாலின் எடுக்காமல் இருந்திருக்கலாம்.. அல்லது ஏ.கோவிந்தசாமி பேச்சையாவது எடுக்காமல் இருந்திருக்கலாம். ஒருவேளை அந்த சமுயதாய மக்களை கவருவதற்காக இப்படி யுக்தியை கையில் எடுத்திருந்தாலும், கோவிந்தசாமி மகனுக்கு சீட் தந்துவிட்டு, அதன்பிறகு இந்த பேச்சினை ஸ்டாலின் பேசியிருந்திருக்கலாம். பொன்முடியை பகைத்து கொள்ள கூடாது என்ற எண்ணமும், அதே சமயம் வன்னியர்கள் ஓட்டு போய்விடக்கூடாது என்ற இரட்டை மனோபாவமும்தான் மக்களின் நம்பகத்தன்மையை இழக்க செய்துவிட்டது.
தேர்தல் செலவு
அதேபோல, நாங்குநேரியில், தேர்தல் செலவு விவகாரம் ஒன்று கிளம்பி உள்ளது. வேட்பாளர் ரூபி மனோகரன், தேர்தல் செலவுக்காக, தன் சொத்துக்ளை அடகு வைத்துள்ளார். அந்த தொகையை தாம்பரத்தை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரிடம் தேர்தல் செலவுக்கு தந்தாராம். ஆனால், 30 சதவீதம் தான் செலவு செய்யப்பட்டதாம். இப்படி ஒரு பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது. கூட்டணி கட்சி என்ற முறையில் திமுகதான் செலவுகளை ஓரளவாவது கவனித்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸிடமிருந்து திமுக நிர்வாகி பணத்தை வாங்கி செலவு செய்யவில்லை என்பது புதுசாக உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை இரு கட்சி தலைவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
உதயநிதி
அதேபோல, போன எம்பி தேர்தலுக்கு வளைச்சு வளைச்சு பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் இந்த முறை மக்களிடம் எடுபடாமல் போய்விட்டதாக சொல்லப்படுகிறது. இப்போது, "இந்த ஆட்சியை இதோடு முடிவுக்கு வந்துவிடும், நாளைக்கே அதிமுகவை வீட்டுக்கு அனுப்பிவிடுவோம், பொறுத்திருந்து பாருங்கள்" என்று பொடி வைத்து ஸ்டாலின் பேசிய வார்த்தைகள் எல்லாமே நொறுங்கி போய், இப்போது, சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 124ஆக அதிகரித்துவிட்டது. இப்போது 5 வருஷத்துக்கு எடப்பாடியாரை எதுவுமே செய்ய முடியாது என்ற நம்பிக்கை வந்துள்ளது.
விவகாரங்கள்
திமுகவின் பொறுப்பு நிறைய கூடி உள்ளது.. உள்கட்சி விவகாரங்களை பேசி தீர்க்க வேண்டி உள்ளது.. கூட்டணி கட்சிகளை அரவணைத்து கொண்டு போக வேண்டி உள்ளது.. கட்சி சீனியர்களையும் சரிக்கட்டி கொள்ள வேண்டி இருக்கிறது.. அப்போதுதான் உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல.. வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு ஒரு எளிய பாதை கிடைக்கும்.. அதற்கான அச்சாரத்தை ஸ்டாலின் இப்போதே போட ஆரம்பிப்பது நல்லது!
உழைப்பு
கருணாநிதி ஒருபோதும் தோல்விகளால் துவண்டதில்லை..அடுத்தடுத்து ஓடிக் கொண்டே இருப்பார். உழைப்பு உழைப்பு.. ஓயாத உழைப்பு என்று ஓடிக் கொண்டிருந்தவர் அவர். அதே பார்முலாவைத்தான் திமுகவின் தற்போதைய தலைமையும் தொண்டர்களும் கைக்கொள்ள வேண்டும்.. தவறுகளையும் திருத்திக் கொண்டு.