மதிமுக, விசிக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு.. நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ஸ்டாலின்?
சென்னை: சட்டமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் மதிமுக மற்றும் விசிக கட்சிகளுடன் இன்று திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் கூட்டணியை உறுதி செய்யும் பணிகளில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிஆர் பாலு தலைமையிலான திமுக குழுவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் மதிமுக நிர்வாகிகளுடன் இன்று திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, முதன்மை செயலாளர் கே.என் நேரு,துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
அதேபோல மதிமுக சார்பில் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்தியா தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாகச் சென்று கொண்டிருக்கிறது.
நாளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் எத்தனை தொகுதிகள் என்பது குறித்த தகவல்களை வெளியிடுவார்கள். மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்" என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் பின்னர் விசிக தலைவர் தொல் திருமாவளவனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டி ஆர் பாலு தலைமையில் பேச்சுவார்த்தை குழுவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. எங்கள் விருப்பத்தைத் தெரிவித்து உள்ளோம். பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். தொகுதிகள் மற்றும் எந்தச் சின்னம் குறித்து பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்