"ஸ்டிரைட்டா நுரையீரலை தாக்கும்".. டாக்டர் அட்வைஸ் இல்லாமல் ஆவி பிடிக்க கூடாது.. தமிழக அரசு அட்வைஸ்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை விடுத்துள்ளார்
சென்னை: டாக்டர் அட்வைஸ் இல்லாமல், யாரும் ஆவி பிடிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா பீதியில் இருந்து காத்து கொள்ள, பலரும் தங்கள் வீடுகளிலேயே ஆவி பிடிக்கின்றனர்.. அதேசமயம், தற்போது அழுத்தமான காற்றை கொண்டு புகைபோடுதல் என்ற விஷயமும் நம் மக்களிடையே பரவி வருகிறது.
அதாவது, மூலிகைகள் கலந்த நீராவியை சுவாசித்தால் நல்ல பலன் கிடைக்கிறது என்று ஒரு தரப்பு சொல்கிறது.. ஆனால், இதை அல்லோபதி மருத்துவர்கள் பலமாக மறுத்துள்ளனர்.. அத்துடன் இது ஆபத்தை தரும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
பதைபதைப்பான இரண்டரை மணிநேரம்.. மதுரைக்கு நள்ளிரவில் ஆக்சிஜன் வந்தது எப்படி?.. சு.வெங்கடேசன் டிவிட்!
தொற்று நிலை
ஆவி பிடிப்பதால் தொண்டையிலோ, மேல் நாசியிலோ பாரா நாசல் சைனஸ்களிலோ உள்ள வைரஸ்களை கொல்ல இயலாது என்றும், நோய் தொற்று நிலை அடுத்த நிலைக்கு முற்றுவதையும் வேது பிடிப்பதால் நிறுத்த முடியாது என்றும் பலமாக சொல்கிறார்கள்.
இயந்திரம்
அதுமட்டுமல்ல, ஆவி பிடித்தலை வெளி இடங்களில் வைத்து, அதுவும் நிறைய பேர் ஒரே இடத்தில் கூடி, ஒரே ஆவி பிடிக்கும் இயந்திரம் மூலம் ஆவி பிடிப்பது என்பது கொரோனாவை மேலும் பரவ விட்டுவிடும் அபாயமும்உள்ளதாம்.. எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த இயந்திரத்தை ஒரு கொரோனா நோயாளி பயன்படுத்திவிட்டு, இன்னொருவர் பயன்படுத்தும்போது பலருக்கும் தொற்று பரவும் நிலை உருவாகும்... தும்மல் வரும், இருமலும் வரும்.. இதன்மூலமும் தொற்று பரவும் என்கிறார்கள்.
அறிக்கை
இந்த சமயத்தில்தான் தமிழக அரசு தடாலாடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள செய்தி இதுதான்: "தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ நெறிமுறைகளின் படி கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வழிமுறைகளை வகுத்துள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.
வைத்தியம்
பொது மக்கள் தாங்களாகவே சுய வைத்தியம் என்ற பெயரில் சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் தவறாகும். அவ்வாறான சிகிச்சை முறைகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அழுத்தமான காற்று புகை போடுதல் என்ற ஒன்று தற்போது பொது மக்களிடையே பரவி வருகிறது. இந்த புகை போடுதல் மூலம் அழுத்தமான காற்று அவர்களின் வாய் வழியே சென்று அவர்களின் நுரையீரலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
கிருமி
இதுமட்டுமல்லாமல் அவர்கள் வாயை திறந்து புகையை பிடிக்கும் போது வைரஸ் கிருமியானது அருகில் உள்ளவர்களுக்கு மிக வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளது. இது மருத்துவ நெறிமுறைகளின் படி இதனை மருத்துவ சிகிச்சையாக கருத முடியாது. நோய் தொற்று ஏற்பட்டவுடன் பொதுமக்கள் தாங்களாகவே வீட்டுமுறை வைத்தியம் செய்வதை விட்டு மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
சித்த மருத்துவம்
தமிழகம் முழுவதும் கோவிட் நோயாளிகளுக்காக சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த கோவிட் வைரஸ் என்பது புதுமையான நோயாகவும் இது நேரடியாக நுரையீரலை பாதிக்கும் தன்மை உடையதாக இருப்பதாலும் மருத்துவருடைய அறிவுரை இல்லாமல் புகை போடுதல் என்பதை பயன்படுத்தக் கூடாது.
மருத்துவ முறை
சித்தா கோவிட் கேர் மையத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவ முறையானது மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் மாநில அரசு மருத்துவ குழு ஒன்று அமைத்து அதன் வழிகாட்டுதலின்படி உள்மருந்து மற்றும் பிற மருத்துவ முறைகளை கூறியுள்ளது. எனவே, பொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் முக நூல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற புகை போடுதல் என்ற ஒன்றை சுயமாக எடுத்துக் கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது." எனத் தெரிவித்துள்ளனர்.