திமுக இனி குமுக என அழைக்கப்படும்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்கிறார்
சென்னை: திமுக தற்போது குடும்ப முன்னேற்ற கழகமாக இருப்பதால் இனி குமுக என அழைக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து வெள்ளக்கோவில் சாமிநாதன் விலக்கப்பட்டு, உதயநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், உதயநிதி ஸ்டாலினை விட பல நல்ல தலைவர்கள் திமுகவில் இருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலினின் மகன் என்ற தகுதி மட்டும் உள்ள உதயநிதிக்கு பதவி அளித்திருக்கிறார்கள்.
திமுக மடம் கிடையாது என கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் தற்போது பார்க்கும் போது திமுக மடாதிபதி மன்னராட்சி போலவே செயல்படுவது போல் தெரிகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்கு பதிலாக குடும்ப முன்னேற்றக் கழகம் என வைத்துக் கொள்ளலாம். அது திமுக அல்ல, குமுக. சாமானியன் கூட முதல்வர் ஆகலாம் என்பது அதிமுகவில் மட்டும் தான் நடக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
பால்வளத்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதனையொட்டி, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மெரினாவில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக மக்களுக்கான கடசி என்றார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், தரமான பாலை மக்களுக்கு வழங்குவதற்கான புதிய கருவிகள் வழங்கப்படும். ரூ.3,500-ல் இருந்து ரூ.4,000 ஆக ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கப்படும் என்றும் கூறினார்.